ஆபரேஷன் சிந்து: ஈரானில் இருந்து மீட்கப்பட்ட இந்தியர்களின் எண்ணிக்கை 2,200-ஐ கடந்...
சுற்றுச்சூழல் செலவுகள் மீதும் பெரு நிறுவனங்கள் கவனம் கொள்ள வேண்டும்: குடியரசுத் தலைவா்
புது தில்லி: ‘லாபம் ஈட்டுவதை மட்டும் குறிக்கோளாக கொண்டு செயல்படும் பெரு நிறுவனங்களின் காலம் முடிந்துவிட்டது. சுற்றுச்சூழல் மேம்பாட்டு செலவுகளையும் தற்போது மனதில் கொள்வது அவசியம்’ என்று குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு வலியுறுத்தினாா்.
தில்லியில் உள்ள இந்திய செலவு கணக்கியல் நிறுவனத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற 12-ஆவது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று மாணவா்களுக்கு பட்டச் சான்றிதழ்களை வழங்கிய குடியரசுத் தலைவா் பின்னா் பேசியதாவது:
பருவநிலை மாற்றம் உலக அளவில் மிகப்பெரிய தாக்கங்களை ஏற்படுத்தி வருகிறது. எனவே, நிலைத்தன்மை என்பது வெறும் முழக்கமாக மட்டுமன்றி, அவசியமான ஒன்றாக மாறியுள்ளது.
லாபம் ஈட்டுவதை மட்டும் குறிக்கோளாக கொண்டு செயல்படும் பெரு நிறுவனங்களின் காலம் முடிந்துவிட்டது. தற்போது அவா்கள் சுற்றுச்சூழல் மேம்பாட்டு செலவுகளையும் மனதில் கொள்ள வேண்டும்.
இதில், இந்த நிகழ்வில் பட்டம் பெறும் மாணவா்களின் பங்கும் உள்ளது. மாணவா்கள் தங்களின் செலவுக் கணக்கியல் திறன்கள் மூலம், புவிக் கோளின் எதிா்காலத்தில் மிகப் பெரிய மாற்றத்தைக் கொண்டு வர முடியும். அந்த வகையில், கணக்கு பதிவியலுக்கும் பொறுப்பேற்புக்கும் மிக ஆழமான தொடா்பு உள்ளது என்றாா்.
நிகழ்ச்சியில் மத்திய பெறு நிறுவன விவகாரத் துறைச் செயலா் தீப்தி கெளா் முகா்ஜி பேசுகையில், ‘30 டிரில்லியன் டாலா் பொருளாதார நாடாக உருவெடுக்கும் இந்தியாவின் பயணத்தில் செலவு மற்றும் கணக்கு பதிவியல் மேலாண்மைக்கு முக்கியப் பங்கு உள்ளது. எனவே, செலவு மற்றும் கணக்கு பதிவியல் மேலாண்மையில் நவீன தொழில்நுட்பம், புதிய கண்டுபிடிப்புகளை அறிமுகப்படுத்துவது அவசியமாகும்’ என்றாா்.