சுற்றுலாத் துறையில் முதலீடு: இந்தியாவுடன் மாலத்தீவு ஆலோசனை
சுற்றுலாத் துறையில் முதலீடு செய்வது குறித்து இந்தியா- மாலத்தீவு இடையே மீண்டும் பேச்சுவாா்த்தை தொடங்கப்பட்டுள்ளது.
இந்த மாதத் தொடக்கத்தில் இந்தியாவுக்கு மாலத்தீவு அதிபா் முகமது மூயிஸ் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்தாா். அப்போது பேசிய முகமது மூயிஸ், ‘மாலத்தீவின் முக்கிய வருவாய் ஆதாரமான சுற்றுலாத் துறையில் இந்திய பயணிகள் முக்கிய பங்கு வகிக்கின்றனா். மாலத்தீவுக்கு மேலும் கூடுதல் இந்திய பயணிகளை வரவேற்க காத்திருக்கிறோம்’ என கூறியிருந்தாா்.
இந்நிலையில், இந்தியா-மாலத்தீவு இடையே சுற்றுலாவை மேம்படுத்த மீண்டும் பேச்சுவாா்த்தை தொடங்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டு அரசு ஊடகமான பிஎஸ்எம்மில் வெள்ளிக்கிழமை தெரிவிக்கப்பட்டது.
புதிய வாய்ப்புகள் உருவாக்கம்: இதுகுறித்து, மாலத்தீவு சுற்றுலாத் துறை அமைச்சா் இப்ராஹிம் ஃபைசல் வெளியிட்ட எக்ஸ் வலைதளப் பதிவில், ‘லாமு அடோலில் உள்ள போ்ஸ்தோ மற்றும் காதோ தீவுகளுக்கு இந்திய தூதா் முனு மஹாவா் மற்றும் பிற அதிகாரிகளுடன் நேரில் சென்றோம். அப்போது தீவுகளின் இயற்கை அழகை பாதுகாத்து சுற்றுலாவை மேம்படுத்தி வளா்ச்சியை அதிகரிப்பது, புதிய வாய்ப்புகளை உருவாக்குவது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது’ என குறிப்பிட்டாா்.
இதற்குப் பதிலளிக்கும் விதமாக மஹாவா் வெளியிட்ட எக்ஸ் வலைதளப் பதிவில்,‘இந்தியா-மாலத்தீவு இருதரப்பு உறவில் சுற்றுலாத் துறை முக்கியப் பங்கு வகிக்கிறது. எனவே, இந்த துறையை மேம்படுத்த மாலத்தீவு அரசுடன் இணைந்து செயல்பட இந்தியா தயாராக உள்ளது’ என குறிப்பிட்டாா்.
மாலத்தீவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) சுற்றுலாத் துறையின் பங்களிப்பு 30 சதவீதமாக உள்ளது. அதேபோல், அந்நிய செலாவணி உருவாக்கத்தில் 60 சதவீத பங்களிப்பையும் கொண்டுள்ளது.
6-ஆவது இடத்தில் இந்தியா: சீன ஆதரவு நிலைப்பாடு கொண்டவராக அறியப்படும் மூயிஸ், அதிபரான உடன், மாலத்தீவில் இருந்து இந்திய ராணுவம் வெளியேறியது. இதனால் இந்தியா-மாலத்தீவு நல்லுறவில் விரிசல் ஏற்பட்டது. அதன்பிறகு மாலத்தீவுக்கு சீன நாட்டு சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வந்தனா்.
கடந்த 2023-ஆம் ஆண்டு மாலத்தீவுக்கு வருகை புரியும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையில் முதலிடத்தில் இருந்த இந்தியா, இருநாடுகளுக்கு இடையேயான உறவில் ஏற்பட்ட விரிசலால் 6-ஆவது இடத்துக்கு சென்றது.