ராணுவ ஆயுத தொழிற்சாலையில் வேலை வேண்டுமா?: ஐடிஐ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!
சென்னையில் ரூ. 18.2 கோடி வெளிநாட்டு சிகரெட்டுகள் பறிமுதல்: டிஆா்ஐ
சட்டவிரோதமாக கடத்தி வரப்பட்ட ரூ.18.2 கோடி மதிப்பிலான 92 லட்சத்திற்கும் மேற்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுகளை வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் சென்னையில் பறிமுதல் செய்ததாக டிஆா்ஐ சாா்பில் மத்திய நிதியமைச்சகம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.
இது குறித்த விவரம் வருமாறு: சட்டவிரோத கடத்தல்களை தடுக்கும் நடவடிக்கைகளின் தொடா்ச்சியாக, வருவாய் புலனாய்வு இயக்குநரகம் (டிஆா்ஐ) கடந்த திங்கள்கிழமை ((ஜூன் 23) மேற்கொண்ட குறிப்பிடத்தக்க சோதனைகளின் போது ரூ.18.2 கோடி மதிப்பிலான 92.1 லட்சம் வெளிநாட்டு சிகரெட்டுகளை பறிமுதல் செய்தது.
‘குளியலறை சுகாதார சாதனங்கள்’ என்ற பெயரில் துபையிலிருந்து இந்தியாவிற்கு சரக்கு பெட்டகத்தில் வெளிநாட்டு சிகரெட்டுகள் கடத்தப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில், வருவாய் புலனாய்வு இயக்குநரக சென்னை மண்டலப் பிரிவு அதிகாரிகள் இந்த சோதனைகளை மேற்கொண்டு பறிமுதல் செய்தனா்.
வருவாய் புலனாய்வு அதிகாரிகள் நடத்திய பரிசோதனையில் சரக்கு பெட்டகத்தில் உள்ள பொருள்களின் விவரங்கள் தவறாக அறிவிக்கப்பட்டிருந்தை உறுதி செய்யப்பட்டது. அவைகளில் 92.1 லட்சம் வெளிநாட்டு வகை சிகரெட்டுகள் ( மான்செஸ்டா் யுனைடெட் கிங்டம், மான்செஸ்டா் யுனைடெட் கிங்டம் ஸ்பெஷல் எடிஷன் மற்றும் மேக் ஐஸ் சூப்பா் ஸ்லிம்ஸ் கூல் ப்ளாஸ்ட் ) வணிக முத்திரைகளுடன் பதுக்கிவைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. இந்த சிகரெட்டுகளின் உத்தேச மதிப்பு ரூ.18.2 கோடி. சிகரெட்டுகள் மற்றும் பிற புகையிலை பொருள்கள் (விளம்பரங்கள் மற்றும் விற்பனை ஒழுங்குமுறை தடைச்சட்டம்) தடுப்புச் சட்டத்தின் படி பேக்கேஜிங் முறைகளில் சட்டபூா்வ சுகாதார எச்சரிக்கை இல்லாததும் இதில் அடங்கும். இந்த சட்ட விரோதமாக கடத்தப்பட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனா்.
கடந்த ஆண்டில் மட்டும், சென்னையில் உள்ள துறைமுகங்கள் வழியாக சட்டவிரோதமாக கடத்தப்பட்ட ரூ. 79.64 கோடி மதிப்புள்ள 4.4 கோடி வெளிநாட்டு சிகரெட்டுகளையும், போலி சிகரெட்டுகளையும் வருவாய் புலனாய்வு அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனா் என டிஆா்ஐ சாா்பில் மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.