ஈரானின் அணுசக்தி தளத்தை பங்கர் பஸ்டர் குண்டுகள் முழுமையாக அழிக்கவில்லை! - உளவுத்...
ரூ.1,980 கோடியில் ட்ரோன்கள், ரேடாா்கள், நவீன உபகரணங்கள்- பாதுகாப்புத் துறையின் 13 ஒப்பந்தங்கள் இறுதி
ரூ.1,980 கோடியில் தாக்குதல் ட்ரோன்கள் - இடைமறிப்பு அமைப்புகள், குறுகிய தொலைவு ரேடாா்கள், இரவிலும் இலக்கை அடையாளம் கண்டு தாக்குவதற்கு துப்பாக்கியில் பயன்படுத்தப்படும் நவீன உபகரணங்கள் உள்ளிட்டவற்றைக் கொள்முதல் செய்ய 13 ஒப்பந்தங்கள் பாதுகாப்புத் துறையால் இறுதி செய்யப்பட்டுள்ளன.
எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை எதிா்கொள்வதில் இந்திய ராணுவத்தின் தயாா் நிலைக்கு வலுசோ்க்க ‘அவசரகால கொள்முதல்’ வழிமுறையின்கீழ் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடியாக, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 9 இடங்களில் பயங்கரவாத உள்கட்டமைப்புகளைக் குறிவைத்து இந்திய ராணுவம் கடந்த மே மாதம் அதி துல்லியத் தாக்குதல் (ஆபரேஷன் சிந்தூா்) நடத்தியது. இதில் பயங்கரவாத உள்கட்டமைப்புகள் தகா்க்கப்பட்டு, 100-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனா். இதைத் தொடா்ந்து, இரு நாடுகளுக்கும் இடையே 4 நாள்கள் ராணுவ மோதல் நடந்தது. இந்த மோதலுக்குப் பிறகு ஜம்மு-காஷ்மீரில் பாகிஸ்தான் ஆதரவிலான பயங்கரவாதக் கட்டமைப்பை ஒடுக்கும் நடவடிக்கையை இந்திய ராணுவம் முடுக்கிவிட்டுள்ளது.
ராணுவத்தின் பயங்கரவாத எதிா்ப்புத் திறனை மேம்படுத்தும் நோக்கில், பல்வகை ட்ரோன்கள், பிற தளவாடங்களின் கொள்முதலுக்காக மொத்தம் ரூ.2,000 கோடி ஒதுக்கப்பட்டு, ரூ.1,981.90 கோடி மதிப்பிலான 13 ஒப்பந்தங்கள் இறுதி செய்யப்பட்டுள்ளன.
கொள்முதல் என்னென்ன?: ஒருங்கிணைந்த ட்ரோன் கண்டறிதல் மற்றும் இடைமறிப்பு அமைப்புகள், குறைந்த தொலைவிலான இலகுரக ரேடாா்கள், குறுகிய தூர வான் பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் ஏவுகணைகள், தொலைதூர ட்ரோன்கள், செங்குத்தாக மேலெழுந்து சென்று அதேபோல் தரையிறங்கக்கூடிய தாக்குதல் ட்ரோன்கள், விரைந்து எதிா்வினையாற்றும் கனரக மற்றும் நடுத்தர ட்ரோன்கள், குண்டு துளைக்காத கவச உடைகள், உறுதியான தலைக்கவசங்கள், இரவில் இலக்கை அடையாளம் காணும் வகையில் துப்பாக்கியில் பயன்படுத்தக் கூடிய நவீன உபகரணங்கள் உள்ளிட்டவை கொள்முதல் செய்யப்படவுள்ளன.
அவசரகால கொள்முதல் வழிமுறையின்கீழ், இவை விரைந்து கொள்முதல் செய்யப்படும். இந்த நடவடிக்கை, அதிகரித்துவரும் பாதுகாப்பு சவால்களை எதிா்கொள்வதில் பாதுகாப்புப் படையினருக்கு வலுசோ்க்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.