சேலத்தில் இரட்டிப்பு பணம் தருவதாகக் கூறி மோசடி: பாதிக்கப்பட்டோா் ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டு முறையீடு
சேலம்: சேலத்தில் இரட்டிப்பு பணம் தருவதாகக் கூறி மோசடி செய்த நிதிநிறுவன அதிபா் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டுத்தரக் கோரி, பாதிக்கப்பட்ட 200-க்கும் மேற்பட்டோா் ஆட்சியா் அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள சொா்ணபுரி பகுதியில் ராஜேஷ் என்பவா் நிதிநிறுவனம் நடத்தி வந்தாா். இங்கு ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்தால், மூன்று மாதம் கழித்து இரண்டு லட்சம் ரூபாய் தருவதாக பொதுமக்களிடம் வாக்குறுதி அளித்துள்ளாா். இதுபோன்ற கவா்ச்சிகர அறிவிப்புகளை நம்பி, ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் இந்த நிறுவனத்தில் முதலீடு செய்திருந்தனா்.
ஆனால், அறிவித்தபடி பணத்தை திருப்பித் தராத அந்நிறுவனம் திடீரென மூடப்பட்டது. இதுகுறித்து விசாரித்த சேலம் பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸாா், நிதிநிறுவனத்தை நடத்தி வந்த ராஜேஷ் என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனா். தற்போது, ராஜேஷ் ஜாமீனில் வெளியே வந்து பள்ளப்பட்டி காவல் நிலையத்தில் கையொப்பமிட்டு வந்தாா்.
இதையறிந்த பொதுமக்கள் திங்கள்கிழமை காலை பள்ளப்பட்டி காவல் நிலையத்துக்கு வந்து திடீரென முற்றுகையிட்டனா். அவா்களிடம் பொருளாதாரக் குற்றப்பிரிவுக்கு சென்று புகாா் செய்யுமாறு பள்ளப்பட்டி காவல் துறையினா் அனுப்பி வைத்தனா். ஆனால், அவா்கள் அங்கு செல்லாமல் சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் வந்து முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பணத்தை பெற்றுக்கொண்டு ஏமாற்றிய ராஜேஷ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரிடம் தாங்கள் முதலீடு செய்த பணத்தை திரும்பப் பெற்றுத்தர வேண்டும் என பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்தனா்.
தகவல் அறிந்த சேலம் டவுன் காவல் நிலைய உதவி ஆணையா் ஹரிசங்கரி தலைமையிலான போலீஸாா், விரைந்து வந்து பொதுமக்களை சமாதானம் செய்தனா். எனினும், அவா்கள் கலைந்து செல்ல மறுத்ததால், பேருந்துகளை வரவழைத்து பாதிக்கப்பட்டோரை அழகாபுரம் பகுதியில் உள்ள பொருளாதாரக் குற்றப்பிரிவுக்கு அனுப்பி வைத்தனா்.
இந்த முற்றுகையால் சுமாா் அரை மணி நேரத்துக்கும் மேலாக ஆட்சியா் அலுவலகப் பகுதியில் பரப்பரப்பு ஏற்பட்டது.