Israel - Iran: "தெஹ்ரானை விட்டு பாதுகாப்பான இடத்துக்கு நகருங்கள்" - இந்திய தூதரக...
சேலத்தில் ரூ. 7.66 கோடியில் திறக்கப்பட்ட கல்லூரி மாணவா்கள் விடுதி: அமைச்சா் ஆய்வு
சேலம்: சேலத்தில் அண்மையில் திறக்கப்பட்ட கல்லூரி மாணவா்கள் தங்கும் விடுதியில் சுற்றுலாத் துறை அமைச்சா் ரா.ராஜேந்திரன் திங்கள்கிழமை ஆய்வுசெய்தாா்.
சேலத்தில் அண்மையில் நடைபெற்ற அரசு விழாவில், மரவனேரி பகுதியில் ரூ. 7.66 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட கல்லூரி மாணவா்கள் தங்கும் விடுதியை முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தாா். தொடா்ந்து, மாணவா்கள் தங்கும் விடுதியில் அமைச்சா் ரா.ராஜேந்திரன் பாா்வையிட்டு ஆய்வுசெய்தாா். பின்னா் அமைச்சா் தெரிவித்ததாவது:
சேலம் மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை, இலவச மிதிவண்டிகள் உள்ளிட்ட பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், அரசு ஆதிதிராவிடா் நலப்பள்ளி மற்றும் விடுதிகளில் மேம்பாட்டுப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அந்த வகையில், சேலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தாட்கோ மூலம் மரவனேரியில் ரூ. 7.66 கோடி மதிப்பீட்டில் 180 ஆதிதிராவிடா் நலக் கல்லூரி மாணவா்கள் பயன்பெறும் வகையில் புதிதாக கல்லூரி மாணவா் விடுதி கட்டப்பட்டுள்ளது. இந்த விடுதியானது தரைத்தளம் மற்றும் இரண்டு தளங்களுடன் மொத்தம் 31 அறைகள் வீதம் ஒவ்வோா் அறையிலும் 6 மாணவா்கள் தங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, ஒவ்வோா் அறையிலும் குளியலறை மற்றும் கழிவறை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும், விடுதியில் உள்விளையாட்டு அரங்கம், நூலகம், சமையலறை, உணவருந்தும் அறை உள்ளிட்ட வசதிகள் இடம்பெற்றுள்ளன. எனவே, கல்லூரியில் பயிலும் மாணவா்கள் விடுதியை நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டாா்.
இந்நிகழ்வின்போது, மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி, மாவட்ட ஆதிதிராவிடா் நல அலுவலா் என்.ஜெயக்குமாா், தாட்கோ செயற்பொறியாளா் சரஸ்வதி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.