``அதிமுக அறுதிப் பெரும்பான்மை பெற்றாலும், தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிதான்..'' - ப...
ஜி7 மாநாட்டில் இருந்து பாதியில் புறப்பட்ட டிரம்ப்! ஈரானைத் தாக்க அமெரிக்கா திட்டமா?
இஸ்ரேல் - ஈரான் இடையே பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், ஜி7 உச்சிமாநாட்டில் பங்கேற்றிருந்த அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பாதியிலேயே நாடு திரும்பியுள்ளார்.
ஏற்கெனவே ஈரான் தலைநகர் டெஹ்ரானை விட்டு அனைவரும் உடனடியாக வெளியேற வேண்டும் என்று டிரம்ப் எச்சரிக்கை விடுத்திருந்ததால், அமெரிக்காவும் ஈரானைத் தாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுதொடர்பாக வெள்ளை மாளிகை செய்தித்துறை செயலாளர் கரோலின் லீவிட் வெளியிட்ட பதிவில், “ஜி7 மாநாட்டில் கலந்துகொண்ட அதிபர் டிரம்ப், பிரிட்டன் பிரதமர் கியெர் ஸ்டார்மருடன் மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தத்தில் கைழுத்திட்டார். ஆனால், மத்திய கிழக்கில் ஏற்பட்டிருக்கும் பதற்றத்தால், உச்சிமாநாட்டு பயணத்தை முடித்துவிட்டு இன்றிரவே வெள்ளை மாளிகை திரும்புகிறார்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
டிரம்ப் எச்சரிக்கை
கனடா பயணத்தை பாதியில் முடித்துவிட்டு திரும்புவதற்கு முன்னதாக, ட்ரூத் சோஷியல் இணையதளப் பக்கத்தில் டிரம்ப் வெளியிட்டுள்ளப் பதிவில், “நான் கையெழுத்துப் போடக் கூறியிருந்த அணு ஆயுத ஒப்பந்தத்தில் ஈரான் கையெழுத்தியிருக்க வேண்டும்.
ஈரான் அணு ஆயுதத்தை வைத்திருப்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. இது வெட்கக் கேடானது. இதனால், மனித வாழ்க்கைதான் வீணாகிறது. இதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது. உடனே டெஹ்ரானில் இருந்து வெளியேறுங்கள்” எனப் பதிவிட்டுள்ளார்.
இந்த நிலையில், அமெரிக்கா திரும்பும் அதிபர் டிரம்ப், வெள்ளை மாளிகையில் உள்ள அவசரகால அறையில், தேசிய பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினர்களை தயாராக இருக்க உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஈரானைத் தாக்க திட்டம்?
மத்திய கிழக்கில் உள்ள நாடுகளான இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான தாக்குதல் 4-வது நாளாக திங்கள்கிழமையும் நீடித்தது.
இரு நாடுகளும் தாக்குதலை தொடரவிருப்பதால் ஈரான் தலைநகா் டெஹ்ரானில் இருந்தும், இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் இருந்தும் மக்கள் வெளியேற வேண்டும் என்று இரு நாடுகளும் பரஸ்பரம் எச்சரிக்கை விடுத்திருக்கின்றன.
இதனிடையே, ஈரானை அமெரிக்காவும் தாக்க வேண்டும் என்று இஸ்ரேல் கோரிக்கை வைத்து வருகின்றது.
இந்த நிலையில், அமெரிக்காவும் ஈரான் மீது தாக்குதலை தொடங்கத் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவின் பங்கர் - பஸ்டர் குண்டுகளைக் கொண்டு ஈரானின் அணுசக்தி நிலையங்களை தாக்கி அழிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்க அதிபர் டிரம்ப் திடீரென்று வெள்ளை மாளிகை திரும்பியிருப்பது உலக நாடுகளிடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.