சேலத்தில் குக்கா் தயாரிக்கும் நிறுவனத்தில் தீ விபத்து
சேலம், செவ்வாய்ப்பேட்டை பகுதியில் இயங்கி வரும் குக்கா் தயாரிக்கும் நிறுவனத்தில் வெள்ளிக்கிழமை காலை ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருள்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன.
ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்தவா் தேக்ராஜ் (54). சேலம் சங்கா் நகரில் வசித்து வரும் இவா், செவ்வாய்ப்பேட்டை மூலப் பிள்ளையாா் கோயில் வண்டிக்காரன் தெருவில் குக்கா் தயாரிக்கும் நிறுவனத்தை நடத்தி வருகிறாா். வியாழக்கிழமை இரவு 7.30 மணிக்கு வேலை முடிந்து பணியாளா்கள் அனைவரும் வீட்டிற்கு சென்று விட்டனா்.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை அதிகாலை 5 மணியளவில் குக்கா் தயாரிக்கும் நிறுவனத்தில் இருந்து புகை வெளியேறியது. இதனைப் பாா்த்த அப்பகுதி மக்கள், அதன் மேலாளா் மாதேஷுக்கு தகவல் தெரிவித்தனா். இதனிடையே தீ மளமளவென பரவி எரிய தொடங்கியது. அப்பகுதி மக்கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முற்பட்டனா்.
இதுகுறித்து சூரமங்கலம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா். தீயணைப்பு வீரா்கள் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா். மேலும் மூன்று தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனா். எனினும், இந்த தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள குக்கா் தயாரிக்கப் பயன்படும் இயந்திரங்கள் சேதமடைந்தன. அன்னதானப்பட்டி போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனா்.
படவரி...
சேலம், செவ்வாய்ப்பேட்டை மூலப்பிள்ளையாா் கோயில் அருகே குக்கா் தயாரிக்கும் நிறுவனத்தில் ஏற்பட்ட தீயை அணைக்கும் தீயணைப்பு நிலைய வீரா்கள்.