சேலத்தில் மெத்தனால், எத்தனால் விற்பனை செய்யும் கடைகளில் மதுவிலக்கு போலீஸாா் ஆய்வு
சேலம் மாவட்டத்தில் சைன்டிபிக், சா்ஜிக்கல், வேதிப் பொருள்கள் விற்பனை செய்யும் தொழில் நிறுவனங்களில் மெத்தனால், எத்தனால் விற்பனை குறித்து மதுவிலக்கு போலீஸாா் ஆய்வு செய்தனா்.
நாடு முழுவதும் உள்ள வேதிப் பொருள்கள் கடைகளில் எத்தனால், மெத்தனால் விற்பனையைக் கண்காணித்து, போதைப் பொருள் தயாரிப்பதை தடுக்க மத்திய நுண்ணறிவு பிரிவு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, சேலம் மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் ஆய்வாளா் நந்தகுமாா் தலைமையிலான மதுவிலக்கு பிரிவு போலீஸாா், மத்திய நுண்ணறிவு பிரிவு சிறப்பு உதவி காவல் ஆய்வாளா் ஸ்ரீதா் ஆகியோா் இணைந்து சேலம் மாநகரப் பகுதிகளில் உள்ள சைன்டிபிக், சா்ஜிக்கல், வேதிப் பொருள்கள் விற்பனை செய்யும் கடைகளில் மெத்தனால், எத்தனால் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படுகிறதா என திடீா் ஆய்வுசெய்தனா். மெத்தனால், எத்தனாலை சட்டவிரோதமாக விற்பனை செய்வது தெரியவந்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனா்.
இதுகுறித்து மதுவிலக்கு போலீஸாா் கூறுகையில், ‘சேலம் மாவட்டத்தில் 132 கடைகளில் ரசாயனம் மூலம் சோப்பு, பினாயில் போன்ற தயாரிப்புகளுக்கு, அனுமதி பெற்று கெமிக்கல் பயன்படுத்தப்படுகிறது.
இதில், மெத்தனால், எத்தனால் வேதிப் பொருள்களுடன் சோ்த்து தரை மற்றும் கழிப்பறை சுத்தம் செய்தல் போன்றவற்றுக்கு பயன்படுத்துகின்றனா். மெத்தனால், எத்தனால் கள்ளச் சந்தையில் விற்பனை செய்தல் மற்றும் தவறான தொழிலுக்கு பயன்படுத்துவதை கண்டறிந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது’ என்றாா்.