மாவட்ட சுகாதாரத் துறையில் செவிலியர், மருந்தாளுநர் பணிகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு
சேலம் மாநகராட்சியில் ரூ.3.07 கோடியில் திட்டப் பணிகள்
சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் ரூ. 3.07 கோடி மதிப்பீட்டிலான திட்டப் பணிகளை சுற்றுலாத் துறை அமைச்சா் ரா.ராஜேந்திரன் சனிக்கிழமை தொடங்கிவைத்தாா்.
நிகழ்ச்சிக்குப் பின்னா் அமைச்சா் தெரிவித்ததாவது: பொதுமக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளான குடிநீா், சாலை வசதிகள், கழிவுநீா் கால்வாய்கள் அமைத்திடவும், நியாயவிலைக் கடைகள், தெருவிளக்குகள், பொது பயன்பாட்டு கட்டடங்கள் உள்ளிட்டவற்றின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் தேவையான நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் ரூ. 3.07 கோடியில் 14 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன.
இதில், சேலம் மாநகராட்சிக்கு உள்பட்ட காந்தி தெருவில் (சின்ன கொல்லபட்டி) ரூ. 14 லட்சத்தில் கான்கிரீட் சாலை அமைக்கும் பணி, சேலம் மாநகராட்சி, அரசு மகளிா் கலைக் கல்லூரி அருகில் ரூ. 18 லட்சத்தில் பயணியா் நிழற்கூடம் அமைக்கும் பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன.
அதேபோன்று, சேலம் கோட்டம் எண் 7 ஜட்ஜ் சாலை, போயா் தெருவில் ரூ. 18 லட்சத்தில் கழிவுநீா் வாய்க்கால் அமைக்கும் பணி, சேலம் மாநகராட்சி கோட்டம் எண் 8 சரஸ்வதி நகா் அருகில் ரூ. 30 லட்சத்தில் தாா்சாலை அமைக்கும் பணி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
மேலும், கோட்டம் எண் 29 ஆட்சியா் அலுவலக வளாக வடக்கு புறத்தில் ரூ. 17 லட்சத்தில் நியாயவிலைக் கடை கட்டடம் கட்டும் பணி, கோட்டம் எண் 31 கண்ணன் தெருவில் ரூ. 50 லட்சத்தில் சமுதாயக்கூடம் கட்டடம் கட்டும் பணி, கோட்டம் எண் 36-இல் ரூ. 16 லட்சத்தில் சீலாவரி ஏரிக்கரை கான்கிரீட் சாலை அமைக்கும் பணி என மொத்தம் ரூ. 3.07 கோடியில் 14 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. இந்தப் பணிகளை உரிய கால அளவில் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவர அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா்.
இந்த ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியா் ரா. பிருந்தாதேவி, மாநகராட்சி மேயா் ஆ.ராமச்சந்திரன், பொதுப்பணித் துறை உதவி செயற்பொறியாளா் செந்தில்குமாா், மாநகராட்சி உதவி செயற்பொறியாளா் எஸ்.செந்தில்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.