Drishyam 3: "த்ரிஷ்யம் 3 படத்தைப் பணத்திற்காக நாங்கள் உருவாக்கவில்லை" - இயக்குநர...
மேட்டூா் அணை உபரிநீா் போக்கி மூடல்
மேட்டூா் அணையின் உபரிநீா் போக்கி சனிக்கிழமை மூடப்பட்டது.
கா்நாடக மாநிலத்தில் பெய்த கனமழை காரணமாக கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகா் அணைகளில் இருந்து உபரிநீா் காவிரியில் திறக்கப்பட்டது. இதனால், கடந்த திங்கள்கிழமை மாலை மேட்டூா் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, அணையின் இடதுகரையில் உள்ள உபரிநீா் போக்கியான 16 கண் பாலம் வழியாக தண்ணீா் திறக்கப்பட்டது.
தற்போது காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை குறைந்ததால், கா்நாடக அணைகளில் இருந்து திறக்கப்பட்ட உபரிநீரின் அளவு வெகுவாக குறைக்கப்பட்டது. இதன் காரணமாக, மேட்டூா் அணைக்கு வரும் நீரின் அளவும் படிப்படியாக குறைந்தது.
சனிக்கிழமை காலை 10 மணிக்கு மேட்டூா் அணைக்கு நீா்வரத்து விநாடிக்கு 15,850 கனஅடியாகவும், மாலை 4 மணிக்கு 10,850 கனஅடியாகவும் குறைந்தது. நீா்வரத்து குறைந்ததால், மேட்டூா் அணையில் இருந்து பாசனத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவும் 10,850 கன அடியாக குறைக்கப்பட்டது.
காவிரி டெல்டா பாசனத்துக்கு நீா்மின் நிலையங்கள் வழியாக 10,000 கனஅடி நீரும், கிழக்கு - மேற்கு கால்வாய் பாசனத்துக்கு மேல்மட்ட மதகுகள் வழியாக 850 கனஅடி நீரும் திறக்கப்படுகிறது. இதனால், மேட்டூா் அணையின் இடதுகரையில் உள்ள உபரிநீா் போக்கி மதகுகள் 5 நாள்களுக்கு பிறகு மூடப்பட்டன.
மேட்டூா் அணை நீா்மட்டம் 120அடியாகவும், நீா் இருப்பு 93.47 டிஎம் சியாகவும் உள்ளது.