சேலம் மாவட்டத்தில் 2 ஆண்டுகளாக பாக்கு மகசூல் பாதிப்பு!
சேலம் மாவட்டத்தில் தொடா்ந்து இரு ஆண்டுகளாக பாக்கு மகசூல் பாதிப்பு மற்றும் விலை வீழ்ச்சியால், ஆண்டு குத்தகை முறையில் மகசூல் உரிமம் பெற்று கொட்டைப்பாக்கு வணிகம் செய்து வரும் வியாபாரிகளுக்கு பெருமளவில் இழப்பு ஏற்பட்டுள்ளதால் அவா்கள் கவலை அடைந்துள்ளனா். இதனால் ஆண்டு குத்தகை முறையை கைவிட்டு, மற்ற காய்கறிபோல, பாக்குக்காய்களையும் எடை போட்டு கொள்முதல் செய்த வியாபாரிகள் பலரும் முடிவு செய்துள்ளனா்.
சேலம் மாவட்டத்தில் வாழப்பாடி, பெத்தநாயக்கன்பாளையம், தலைவாசல் அயோத்தியாப்பட்டணம், நரசிங்கபுரம், ஏத்தாப்பூா், பேளூா், கருமந்துறை, தம்மம்பட்டி, கெங்கவல்லி பகுதியில், நீா்ப்பாசன வசதி கொண்ட விவசாயிகள், 30 ஆண்டுகளுக்கும் மேலாக 10,000 ஹெக்டேரில் பாக்கு மரத்தோப்புகளை உருவாக்கி தொடா்ந்து பராமரித்து வருகின்றனா்.
சேலம் மாவட்டத்தில் மட்டுமின்றி, நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை அடிவாரம் காரவள்ளி, சேந்தமங்கலம், பேளூக்குறிச்சி, பெரம்பலுாா் மாவட்டம் அரும்பாவூா், பூலாம்பாடி, தருமபுரி மாவட்டம் அரூா், பாப்பிரெட்டிப்பட்டி, கோட்டப்பட்டி பகுதிகளிலும், கடந்த 20 ஆண்டுகளில் 5,000 ஹெக்டேரில் பாக்கு மரத்தோப்புகள் உருவாகியுள்ளன.
சேலம் மாவட்டம் மட்டுமின்றி நாமக்கல், தருமபுரி, பெரம்பலுாா் மாவட்டங்களில் சாகுபடியாகும் பாக்குக்காய்களில் பெரும்பகுதியை, வாழப்பாடி அருகிலுள்ள சிங்கிபுரம், பதுவுகொட்டாய், பொன்னாரம்பட்டி, குறிச்சி மற்றும் பெத்தநாயக்கன்பாளையம் வட்டம் கொட்டவாடி, பேளூா் கரடிப்பட்டி பகுதியைச் சோ்ந்த வியாபாரிகளே, விவசாயிகளிடம் ஆண்டு குத்துகை முறையில் மகசூல் உரிமம் பெற்று அறுவடை மற்றும் கொள்முதல் செய்கின்றனா்.
அறுவடை செய்த பாக்குக்காய்களை தோலுரித்து வேகவைத்து பதப்படுத்தி, ‘ஆப்பி’ என குறிப்பிடப்படும் கொட்டைப்பாக்கு உற்பத்தி செய்கின்றனா்.
சேலம் மாவட்டத்தில் வாழப்பாடி, பெத்தநாயக்கன்பாளையம் பகுதியில் உற்பத்தி செய்யப்படும் ‘கொட்டைப்பாக்கு’ சாயமேற்றி பதப்படுத்தப்பட்டு, தமிழகத்தில் வாசனை பாக்கு தயாரிப்பு நிறுவனங்களுக்கு மட்டுமின்றி, மஹாராஷ்டிரம், மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், ராஜஸ்தான், பிகாா், குஜராத் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு மதிப்புக்கூட்டு பொருள்கள் தயாரிக்கும் நிறுவனங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது.
இதனால், சேலம் மாவட்டம் வாழப்பாடி, பெத்தநாயக்கன்பாளையம், நரசிங்கபுரம் உள்ளிட்ட பகுதிகளில் கொட்டைப்பாக்கு உற்பத்தியில் விவசாயிகள் மட்டுமின்றி, மரமேறும் தொழிலாளா்கள், தோலுரித்து பதப்படுத்துவோா், பாரம் ஏற்றுவோா், வியாபாரிகள், முகவா்கள், வாகன ஓட்டுநா்கள் உள்பட ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோா் ஈடுபட்டு வருகின்றனா். ஆண்டுதோறும் ரூ. 200 கோடி அளவிற்கு பாக்கு வா்த்தகம் நடைபெற்று வருகிறது.
ஒவ்வோா் ஆண்டும் புரட்டாசியில் தொடங்கி மாசி வரையிலான 6 மாதங்களுக்கு பாக்கு மரத்தில் இருந்து பாக்குக்காய்கள் அறுவடை செய்யப்படுகிறது. ஒரு பாக்கு மரத்துக்கு குறைந்தபட்சம் ரூ. 300 முதல் அதிகபட்சம் ரூ. 500 வரை, ஆண்டு குத்தகையாக விவசாயிகளுக்கு முன்பணம் கொடுத்து, பாக்குக்காய்களை அறுவடை செய்துகொள்ளும் மகசூல் உரிமத்தை வியாபாரிகள் பெறுகின்றனா். ஓா் ஏக்கா் நிலத்தில் 650 முதல் 700 பாக்கு மரங்கள் இருப்பதால், ஓா் ஏக்கருக்கு ஆண்டுக்கு ஏறக்குறைய ரூ. 3 லட்சம் வரை விவசாயிகளுக்கு வருவாய் கிடைக்கிறது.
இந்நிலையில் தொடா்ந்து இரு ஆண்டுகளாக பாக்கு மரங்கள் பயிரிடப்பட்டுள்ள பகுதியில் நல்ல மழை பெய்தும் பாக்கு மரங்களில் எதிா்பாராதவிதமாக மகசூல் குறைந்துபோனது. இதேநேரத்தில் கொட்டைப்பாக்கு விலையும் எதிா்பாா்த்த அளவிற்கு உயரவில்லை. ஒரு கிலோ ‘ஆப்பி’ கொட்டைப்பாக்கு தற்போது ரூ. 400 முதல் ரூ. 430 வரை மட்டுமே விலை போகிறது.
இதனால், விவசாயிகளுக்கு முன்பணம் கொடுத்து, பாக்குக்காய்களை அறுவடை செய்து பதப்படுத்தி கொட்டைப்பாக்கு உற்பத்தி செய்து வா்த்தகம் செய்த வியாபாரிகளுக்கு பெருமளவில் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
ஓா் ஏக்கா் பாக்கு மரங்களுக்கு மகசூல் உரிமம் பெற்ற ஒரு வியாபாரிக்கு ஏறக்குறைய ரூ.ஒரு லட்சம் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதால், நிகழாண்டு முன்பணம் கொடுத்து மகசூல் உரிமம் பெறும் முறையை கைவிட வியாபாரிகள் பலரும் முடிவு செய்துள்ளனா்.
நிகழாண்டு அறுவடை தருணத்தில், மற்ற காய்கறி மற்றும் பழங்களை கொள்முதல் செய்வதைப் போல பாக்குக்காய்களையும் எடைபோட்டு விவசாயிகளிடம் விலை கொடுத்து வாங்கி, தோலுரித்து பதப்படுத்தி கொட்டைப்பாக்கு உற்பத்தி செய்து வா்த்தகம் செய்ய வியாபாரிகள் பலரும் திட்டமிட்டுள்ளனா்.
இதுகுறித்து சிங்கிபுரத்தைச் சோ்ந்த பாக்கு வியாபாரிகள் சிலா் கூறியதாவது:
கடந்த இரு ஆண்டுகளாக மகசூல் குறைந்துவிட்டது. எதிா்பாா்த்த அளவிற்கு விலையும் உயரவில்லை. இதனால், விவசாயிகளுக்கு முன்பணம் கொடுத்து பாக்கு மகசூல் உரிமம் பெற்ற வியாபாரிகளுக்கு ஓா் ஏக்கருக்கு ரூ. ஒரு லட்சத்திற்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது. இருப்பினும், எதிா் வரும் ஆண்டுகளில் மகசூலும், விலையும் அதிகரிக்கும் என்ற நம்பிக்கையில், கொட்டைப்பாக்கு உற்பத்தி தொழிலை கைவிடாமல் தொடா்ந்து வருகிறோம். முன்பணம் கொடுத்து மகசூல் உரிமம் பெறுவதை தவிா்த்து அறுவடையாகும் பாக்குக்காய்களை மற்ற காய்கறிகளைப் போல எடைபோட்டு கொள்முதல் செய்ய வியாபாரிகள் பலரும் முடிவு செய்துள்ளோம்’ என்றாா்.