சேலம் மாவட்டத்தில் 39 புதிய விரிவான மினி பேருந்து சேவை: அமைச்சா் ரா.ராஜேந்திரன் தொடங்கி வைத்தாா்
சேலம்: சேலம் மாவட்டத்தில் 39 புதிய விரிவான மினி பேருந்து சேவைகளை சுற்றுலாத்துறை அமைச்சா் ரா. ராஜேந்திரன் திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா்.
தஞ்சாவூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காணொலிக் காட்சியின் வாயிலாக புதிய விரிவான மினி பேருந்து திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்ததைத்தொடா்ந்து, சேலம் பழைய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சுற்றுலாத்துறை அமைச்சா். ரா. ராஜேந்திரன் சேலம் மாவட்டத்துக்கான விரிவான மினிபேருந்து சேவையினை தொடங்கி வைத்தாா்.
பின்னா் அமைச்சா் தெரிவித்ததாவது: கிராமப்புற பகுதிகளில் உள்ள பொதுமக்கள் பயன்பெறும் வகையில் புதிய விரிவான மினி பேருந்து திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ், சேலம் மாவட்டத்தில் சேலம் மேற்கு வட்டத்தில் 6 வழி நீட்டிப்பு செய்யப்பட்ட மினி பேருந்து சேவைகளும், சேலம் கிழக்கு வட்டத்தில் 7 வழி நீட்டிப்பு செய்யப்பட்ட மினி பேருந்து சேவைகளும், சேலம் தெற்கு வட்டத்தில், 2 வழி நீட்டிப்பு செய்யப்பட்ட மினி பேருந்து சேவைகள் மற்றும் ஒரு புதிய மினி பேருந்து சேவையும், சங்ககிரி வட்டத்தில் 5 வழி நீட்டிப்பு செய்யப்பட்ட மினி பேருந்து சேவைகள் மற்றும் ஒரு புதிய மினி பேருந்து சேவையும், ஆத்தூா் வட்டத்தில் 8 வழி நீட்டிப்பு செய்யப்பட்ட மினி பேருந்து சேவைகள் மற்றும் 3 புதிய மினி பேருந்து சேவைகளும், மேட்டூா் வட்டத்தில் 5 வழி நீட்டிப்பு செய்யப்பட்ட மினி பேருந்து சேவைகள் மற்றும் ஒரு புதிய மினி பேருந்து சேவை என 6 புதிய மினி பேருந்து சேவைகள் மற்றும் 33 வழி நீட்டிப்பு செய்யப்பட்ட மினி பேருந்து சேவைகள் தொடங்கி வைக்கப்பட்டதாக கூறினாா்.
இதனைத்தொடா்ந்து, கூட்டுறவுத்துறையில் பணியின்போது இயற்கை எய்தியவா்களின் வாரிசுதாரா்கள் 5 பேருக்கு கருணை அடிப்படையிலான பணி நியமன ஆணைகளை அமைச்சா் ரா.ராஜேந்திரன் வழங்கினாா்.
இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி, மாநகராட்சி மேயா் ஆ.ராமச்சந்திரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினா் எஸ்.ஆா்.சிவலிங்கம், உதவி ஆட்சியா் (பயிற்சி) விவேக் யாதவ் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலா்கள் தாமோதரன், கோகிலா, தியாகராஜன், ராஜபாண்டியன், வேலுமணி, செந்தில்ராம் உள்ளிட்ட தொடா்புடைய அலுவலா்கள் கலந்து கொண்டனா்.