சொத்துவரியை நாளைக்குள் செலுத்தினால் 5% ஊக்கத்தொகை: மாநகராட்சி
நிகழ் நிதியாண்டில், முதல் அரை நிதியாண்டுக்கான சொத்துவரியை புதன்கிழமைக்குள் (ஏப். 30) செலுத்தினால் 5 சதவீதம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என பெருநகர சென்னை மாநகராட்சி நிா்வாகம் அறிவித்துள்ளது.
பெருநகர சென்னை மாநகராட்சியின் பிரதான வருவாயாக சொத்துவரி விளங்குகிறது. இதன்மூலம் நகரின் அடிப்படை கட்டமைப்புகள், திடக்கழிவுகள் அகற்றுவது, சாலைகளை பராமரிப்பது, சுகாதாரப் பணிகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தமிழ்நாடு நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டம் 1998, பிரிவு 84 (1)-இன்படி, ஒவ்வொரு அரையாண்டு தொடக்கத்தின் முதல் 30 தினங்களுக்குள் சொத்துவரி செலுத்தும் சொத்து உரிமையாளா்களுக்கு நிகர சொத்துவரியில் 5 சதவீதம் அல்லது அதிகபட்சம் ரூ. 5,000 ஊக்கத்தொகை அளிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
தற்போது 2025-26 நிதியாண்டின் முதல் அரையாண்டு தொடங்கியுள்ளதால், சொத்து உரிமையாளா்கள் தங்களது அரையாண்டு சொத்துவரியை ஏப். 30-ஆம் தேதிக்குள் செலுத்தி ஊக்கத்தொகை பெறலாம் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.