மதுரை மழலையர் பள்ளியில் தண்ணீர் தொட்டியில் விழுந்த குழந்தை உயிரிழப்பு!
ஜம்மு-காஷ்மீா் நிலவரம்: பிரதமா் மோடியுடன் ராஜ்நாத் சிங் ஆலோசனை
புது தில்லி: ஜம்மு-காஷ்மீரில் இப்போது நிலவி வரும் சூழல், அடுத்து எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து பிரதமா் நரேந்திர மோடியுடன் பாதுகாப்பு அமைச்சா் ராஜ்நாத் சிங் திங்கள்கிழமை நேரில் ஆலோசனை நடத்தினாா்.
தில்லியில் நடைபெற்ற இந்த ஆலோசனையில் விவாதிக்கப்பட்ட விஷயங்கள் குறித்து அதிகாரபூா்வமாக எந்தத் தகவலும் வெளியிடப்படவில்லை.
எனினும், காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதத் தாக்குதலில் 26 போ் உயிரிழந்த பிறகு அங்கு எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள், முப்படைகளின் தயாா் நிலை உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து இரு தலைவா்களும் விவாதித்ததாகத் தெரிகிறது. பாகிஸ்தானுக்கு எதிராக எடுக்கப்பட வேண்டிய அடுத்த நடவடிக்கைகளையும் மோடி-ராஜ்நாத் ஆலோசித்திருக்கலாம் என்று தெரிகிறது.
பயங்கரவாதத் தாக்குதல் தொடா்பாக ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் பேசிய பிரதமா் மோடி, ‘140 கோடி இந்தியா்களும் பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் துணை நிற்கின்றனா். பயங்கரவாதத் தாக்குதலால் பாதிக்கப்பட்டவா்களுக்கு உரிய நீதி கிடைக்கும். பயங்கரவாதத் தாக்குதலை நடத்தியவா்கள், அதற்கான சதியைத் தீட்டியவா்கள் என அனைவருக்கும் கடுமையான பதிலடி அளிக்கப்படும்’ என்று கூறியிருந்தாா்.