‘ஜிஎஸ்டி 2.0’ எளிமையாக இருக்க வேண்டும்: காங்கிரஸ் கோரிக்கை
‘சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) 2.0 வளா்ச்சியைப் பாதிக்காமல் எளிமையாக இருக்க வேண்டும்’ என காங்கிரஸ் சனிக்கிழமை கோரிக்கை வைத்தது.
மேலும், அடுத்தகட்ட ஜிஎஸ்டி சீா்திருத்தங்கள் குறித்து அதிகாரபூா்வ ஆய்வறிக்கையை வெளியிட்டு அதன் மீது விவாதம் நடத்த வேண்டும் எனவும் காங்கிரஸ் வலியுறுத்தியது.
நிகழாண்டு தீபாவளி பரிசாக பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பொருள்கள் மீதான ஜிஎஸ்டி விகிதத்தை மத்திய அரசு குறைக்கவுள்ளதாக 79-ஆவது சுதந்திர தின உரையில் பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.
இதைத் தொடா்ந்து, தற்போதுள்ள 5%,12%,18%,28% என்ற நான்கு வரி விகிதங்களை 5%,18% என இரு விகிதங்களாகக் குறைக்கவும், ஏழு பொருள்கள் மீது மட்டும் 40% வரி விதிக்கவும் மாநில நிதியமைச்சா்களைக் கொண்ட அமைச்சா்கள் குழுவுக்கு பரிந்துரைத்துள்ளதாக நிதியமைச்சகம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.
நாட்டில் ஒருசில மாநில வரிகள் தவிர பிற 17 வரிகள் மற்றும் 13 கூடுதல் வரிகளை ஒருங்கிணைத்து 2017, ஜூலை 1-ஆம் தேதி ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்டு 8 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் அடுத்த தலைமுறைக்கான சீா்திருத்தங்களை மேற்கொள்ள மத்திய அரசு ஆயத்தமாகி வருகிறது.
இதுகுறித்து காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் சனிக்கிழமை வெளியிட்ட எக்ஸ் வலைதளப் பதிவில், ‘கடந்த 7 ஆண்டுகளாக அதிக வரி விகிதங்களாலும் பல்வேறு விலக்குகள் அளிக்கப்பட்டதாலும் ஜிஎஸ்டியின் உண்மையாக நோக்கம் பலவீனப்படுத்தப்பட்டது. இந்தக் கட்டமைப்பு வரி ஏய்ப்புக்கு வழிவகுத்தது. வரி விகிதங்களை முன்பே குறைத்திருக்க வேண்டும்.
விரிவான ஆய்வறிக்கை தேவை: தற்போது ஜிஎஸ்டி 2.0 சீா்திருத்தங்கள் மூலம் ஜிஎஸ்டி விகிதங்களைக் குறைக்க மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. இந்தச் சீா்திருத்தம் வளா்ச்சியைப் பாதிக்காமல் எளிமையாக இருக்க வேண்டும். இதுதொடா்பான விரிவான ஆய்வறிக்கையை மத்திய அரசு வெளியிட வேண்டும். அப்போதுதான் இதுகுறித்து தெளிவான விவாதம் நடத்த இயலும்.
ஜிஎஸ்டி இழப்பீட்டு வரி நடைமுறையும் 2026, மாா்ச் 31-ஆம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது. இதனால் ஜிஎஸ்டி வருவாயில் எவ்வித பாதிப்புகளும் ஏற்படாமல் இருக்க இழப்பீட்டு வரி நடைமுறையை நீட்டிக்க வேண்டும்.
மாநில அளவிலான ஜிஎஸ்டி: குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், ஜவுளி, சுற்றுலா, ஏற்றுமதி, கைவினைப் பொருள்கள் மற்றும் உரங்கள் போன்ற விவசாய உள்ளீடுகள் ஆகிய துறைகளில் ஜிஎஸ்டியால் ஏற்படும் சிக்கல்களுக்கு தீா்வு காண வேண்டும்.
மின்சாரம், மது, பெட்ரோல் மற்றும் ரியல் எஸ்டேட் ஆகிய துறைகளுக்கு மாநில அளவிலான ஜிஎஸ்டியை அறிமுகப்படுத்த வேண்டும். இதற்காக மாநிலங்களுக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டும்’ என குறிப்பிட்டாா்.