Investment Scam: ஆளுக்கு ரூ.50 லட்சம்; ரூ.1500 கோடி இழந்த பெருநகர பணக்காரர்கள்!
`ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் பாஜகவின் B டீம்தான்’ - புதுச்சேரி அரசியல் நகர்வுகளை விவரிக்கும் நாராயணசாமி
புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி நேற்று மாலை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ``புதுச்சேரி இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரியில், 200-க்கும் மேற்பட்ட செவிலியர் பணியிடங்களை எந்தவித நுழைவுத் தேர்வும் இல்லாமல் நிரப்ப நடவடிக்கை எடுத்து வருகிறது புதுச்சேரி அரசு.
எல்.டி.சி, யு.டி.சி உள்ளிட்டப் பணியிடங்கள் தேர்வுகள் மூலம் நிரப்பப்பட்டது. ஆனால் இந்த செவிலியர் பணி, நுழைவுத் தேர்வு எதுவும் இல்லாமல், மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது மிகப்பெரிய ஊழலுக்கு இடம் கொடுக்கும். வேண்டியவர்களை உள்ளே நுழைப்பதற்கான வாய்ப்பை உருவாக்கும். தேர்வில் வெளிப்படைத்தன்மை இருக்காது.

புதுச்சேரியில் மதுபான கடைகளுக்கு கலால் வரி உயர்த்தப்படுவதாக முதல்வர் அறிவித்தார். அதன்படி எஃப்.எல்-1 எனப்படும் மொத்த மதுவிற்பனை உரிமம் கொண்டவர்களுக்கு ரூ.22 லட்சமாக இருந்த வருடாந்திர உரிமம் ரூ.44 லட்சமாகவும், எஃப்.எல்-2 எனப்படும் சில்லரை விற்பனை மதுக்கடைகளுக்கு ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.20 லட்சமாக உயர்த்தப்பட்டிருக்கிறது.
ஆனால் ரெஸ்டோ பார்களுக்கு மட்டும் ரூ.6 லட்சமாக இருந்ததை ரூ.1லட்சம் மட்டும் கூடுதலாக சேர்த்து ரூ.7 லட்சமாக உயர்த்தியிருக்கிறார்கள். அதையடுத்து முதல்வர் ரங்கசாமியை சந்தித்த மது விற்பனையாளர்கள், ரெஸ்டோ பாரில் காட்டும் பாரபட்சம், தங்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தும் என்று முறையிட்டார்கள்.
ஆனால் அதற்கு செவி சாய்க்காத முதல்வர், அவர்களிடம் கடிந்து பேசியுள்ளார். காரணம் முதல்வர் ரங்கசாமிக்கு வேண்டியவர்கள் ரெஸ்டோ பார்களை நடத்துகின்றனர். இதில் மிகப்பெரிய ஊழல் நாடகம் நடந்துள்ளது. முதல்வருடன் ஆறு புரோக்கர்கள் உள்ளனர். அவர்கள் மது விற்பனையாளர்களிடம் ரூ.25 கோடி கேட்டு பேரம் பேசியுள்ளனர்.
அதாவது மதுபான வரியை உயர்த்துவது. அதன்பிறகு லஞ்சம் பெற்றுக்கொண்டு அதனைக் குறைப்பது. இதுதான் ரங்கசாமியின் வேலை. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். ஊழல் ஆட்சியை அகற்ற வேண்டும். லாட்டரி அதிபர் மார்ட்டினின் மகன் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின், ஜே.சி.எம் என்ற ஒரு அமைப்பைத் தொடங்கியிருக்கிறார்.

அதன்மூலம் பல அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களை தங்கள் அமைப்பில் சேருமாறும், தேர்தலுக்குத் தேவையான நிதியைக் கொடுப்பதாகவும் கூறி வருகின்றார். அதனடிப்படையில் சிலர் அந்த அமைப்பில் சேர்ந்தும் இருக்கின்றனர். ஜோஸ் சார்லஸ் ஆரம்பித்திருக்கும் அந்த அமைப்பு, பா.ஜ.க-வின் `பி’ டீம்.
எங்களுக்கும் பா.ஜ.க-வுக்கும் சம்மந்தம் இல்லை என்று அவர்கள் கூறி வருகின்றனர். ஆனால் பா.ஜ.க-வின் நிழலாக ஜோஸ் சார்லஸ் மார்ட்டினின் அமைப்பு செயல்பட்டு வருகிறது. பா.ஜ.க-வின் அமைச்சர் ஜான்குமார், எம்.எல்.ஏ கல்யாணசுந்தரம் உள்ளிட்டோர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டினுடன் இணைந்து செயல்படுகிறார்கள்.
அவரின் படத்தோடு தீபாவளி பட்டாசு உள்ளிட்டவற்றை கொடுக்கின்றனர். ஆனால் பா.ஜ.க மாநிலத் தலைவர் ராமலிங்கம் எங்களுக்கும், ஜோஸ் சார்லஸ் மார்டினுக்கும் சம்மந்தமே இல்லை என்கிறார். மக்களை ஏமாற்றவும், திசை திருப்பவும் பா.ஜ.க மாநில தலைவர் பொய்யான தகவலை மக்களிடம் கூறி வருகின்றார்.
அவர் ஏன் ஜான்குமார் மீதும், கல்யாணசுந்தரம் மீதும் நடவடிக்கை எடுக்கவில்லை ? அவர்களுக்கு ஏன் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பவில்லை ? அவர்களை பா.ஜ.க-வில் இருந்து நீக்கவில்லை. ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் கொடுக்கும் பேட்டியில், `இந்த அரசுக்கு ஆளத் தகுதியில்லை' என்று கூறுகிறார்.
ஆனால் அவரோடு பா.ஜ.க கைகோத்து நிற்கிறது. என்.ஆர்.காங்கிரஸ் தொகுதிகளைக் குறிவைத்து ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் வேலை செய்கிறார். ஃபிரிட்ஜ் போன்றவற்றைக் கொடுக்கிறார். பா.ஜ.க எம்.எல்.ஏ-க்கள் இருக்கும் தொகுதிகளில் அவர் எந்தப் பணிகளையும் செய்யவில்லை.
இதிலிருந்து பா.ஜ.க-வின் தூண்டுதலின் பேரில் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் செயல்படுகின்றார் என்பது தெளிவாகத் தெரிகிறது. முன்னாள் அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ், பச்சோந்தி போன்று செயல்படுபவர். அவர் தன்னுடைய நிறத்தை நேரத்துக்கு நேரம் மாற்றுவார். எந்தபக்கம் அலை அடிக்கிறதோ அந்தப்பக்கம் செல்வார். அதுதான் அவருடைய நிலை” என்றார்.















