Investment Scam: ஆளுக்கு ரூ.50 லட்சம்; ரூ.1500 கோடி இழந்த பெருநகர பணக்காரர்கள்!
TVK : 'விஜய்யின் கரூர் விசிட் கேன்சல்?' - பின்னணி என்ன?
'கரூர் திட்டம் ரத்து?'
கரூர் சம்பவத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களை நேரில் சென்று சந்திக்க தவெக தலைவர் விஜய் திட்டமிட்டிருந்தார். இந்நிலையில், விஜய்யின் கரூர் விசிட் ப்ளான் கேன்சல் செய்யப்பட்டிருப்பதாக பனையூர் வட்டாரத்தினர் கூறுகின்றனர். விஜய் கரூருக்கு செல்வதற்கு பதிலாக பாதிக்கப்பட்ட மக்களை சென்னைக்கு அழைத்து வந்து இரங்கல் கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டு வருகிறது. விஜய்யின் கரூர் விசிட் பிளான் என்ன ஆனது என விசாரித்தோம்.

கரூர் சம்பவம் நடந்த அன்றிரவே விஜய் அங்கிருந்து சென்னை புறப்பட்டு விட்டார். சம்பவத்தின் சூடு தணிந்த பிறகு காவல்துறையின் அனுமதியோடு கரூர் சென்று துக்கம் விசாரிக்க வேண்டும் என்பதுதான் விஜய் தரப்பின் திட்டம். இதற்காக டிஜிபி அலுவலகத்தில் மனுவும் கொடுக்கப்பட்டது. ஒரு டீம் கரூரில் இறங்கி இரங்கல் கூட்டத்தை நடத்துவதற்காக இடத்தை லாக் செய்யும் வேலையிலும் இறங்கியது.
காவல்துறையின் அனுமதி கிடைப்பதில் தாமதமாகவே, விஜய் உயிரிழந்தோரின் குடும்பத்தை வீடியோ கால் மூலம் தொடர்புகொண்டு பேசினர். அப்போது சில குடும்பத்தினர் அவரிடமே, 'நீங்கள் ஏன் நேரில் வரவில்லை?' எனக் கேட்டனர். 'காவல்துறையின் அனுமதியுடன் உங்களை விரைவில் நேரில் வந்து சந்திக்கிறேன்.' என விஜய்யும் அவர்களுக்கு உறுதிக் கொடுத்திருந்தார்.

கரூருக்கு சென்று பாதிக்கப்பட்டவர்களை சந்தித்த பிறகுதான் அடுத்தக்கட்ட செயல்பாடுகளில் இறங்க வேண்டும் என்பதில் விஜய் தீர்க்கமாக இருந்திருக்கிறார். இதில், விஜய்க்கு ஒரு செண்டிமெண்ட்டும் இருந்திருக்கிறது. பொதுவாக துக்க நிகழ்வுகளில் சம்பந்தப்பட்ட குடும்பங்களிடம் 30 வது நாளுக்குள் துக்கம் விசாரிக்க வேண்டுமென்பது சம்பிரதாயம். இதை கடைபிடித்தாக வேண்டும் என்பதில் விஜய் தரப்பு உறுதியாக இருந்திருக்கிறது. இன்னும் ஒரு சில நாட்களில் சம்பவம் நடந்து 30 நாட்கள் ஆகிவிடும் என்பதால், விஜய் கரூர் செல்வதற்கான வேலைகள் முடுக்கி விடப்பட்டிருந்தது. பனையூர் அலுவலகத்திலும் முக்கிய நிர்வாகிகள் இதுசம்பந்தமாக பல மணி நேர ஆலோசனைகளை நடத்தியிருக்கின்றனர். இந்நிலையில்தான் திடீரென விஜய்யின் கருர் விசிட் கேன்சல் செய்யப்பட்டிருப்பதாக தகவல் சொல்கின்றனர் பனையூர் வட்டாரத்தினர். என்ன காரணம் என்பதை விசாரித்தோம்.
'கரூருக்கு சென்று பாதிக்கப்பட்ட குடும்பங்களை நேரில் சந்தித்து ஆலோசனை கூறாமல் அடுத்தக்கட்ட நகர்வு எதையும் செய்யக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தோம். தலைவரின் எண்ணமும் அதுதான். சம்பவம் நடந்து இத்தனை நாட்கள் ஆகிவிட்டாலும் யாரும் அதிலிருந்து மீளவில்லை. எவ்வளவு சீக்கிரம் கரூருக்கு சென்று அந்த குடும்பங்களை சந்திக்க முடியுமோ அவ்வளவு சீக்கிரம் அவர்களை சந்திக்க நினைத்தோம். ஆனால், நாங்கள் கரூர் செல்ல முடிவெடுத்ததிலிருந்தே பலவிதமான சிக்கல்கள் வரத் தொடங்கிவிட்டது.

அத்தனை பேரின் வீட்டிற்கும் தலைவர் தனித்தனியாக செல்வது யதார்த்ததில் வாய்ப்பில்லை. அதனால் கரூரிலேயே ஒரு மண்டபத்தை பிடித்து அங்கே அந்த குடும்பத்தினரை வர வைத்து இரங்கல் கூற நினைத்தோம். மண்டபம் பிடிப்பதே பெரும் சிரமமாக இருந்தது. இடத்தை வாடகைக்கு விடுபவர்களுக்கு ஆளும் தரப்பிலிருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டது. சிரமப்பட்டு இடத்தை லாக் செய்தால் நாங்கள் கேட்கும் இடத்திற்கு பாதுகாப்பு கொடுப்பதில் பிரச்னைகள் இருக்கிறதென காவல்துறையினர் கையை விரிக்கின்றனர்.
காவல்துறையினர் அனுமதி கொடுக்குமிடம் ரொம்பவே குறுகலாக 50 லிருந்து 100 பேர் வரை மட்டுமே கொள்ளும் இடமாக இருக்கிறது. காம்பவுண்ட் சுவர் கூட இல்லாத இடத்தை காண்பித்து கூட்டம் நடத்திக் கொள்ளுங்கள் என்கிறார்கள். போதாக்குறைக்கு இன்னொரு பக்கம் உளவுத்துறை மூலமும் அழுத்தம் கொடுக்கிறார்கள். இப்படியொரு நேரத்தில் விஜய் கரூருக்கு வருவதில் அவருக்கு பாதுகாப்பில்லை. கவனமாக பார்த்து யோசியுங்கள். வேண்டுமானால் திருச்சி, நாமக்கல் என அண்டை மாவட்டங்களின் வேண்டுமானால் கூட்டம் நடத்துங்கள் என மீண்டும் மீண்டும் எங்களை குழப்பினர். காவல்துறையும் உளவுத்துறையும் கொடுத்த அழுத்தத்தில்தான் நாங்கள் வேறு வாய்ப்புகளை யோசிக்க ஆரம்பித்தோம்.

பாதுகாப்பு குறைவால் மீண்டும் எந்த அசௌகரியமும் மக்களுக்கு ஏற்பட்டுவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம். தலைவரும் துக்கம் நிகழ்ந்து 30 வது நாளுக்குள் குடும்பத்தினரை சந்திக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார். அதனால்தான் பாதிக்கப்பட்ட குடும்பங்களை சென்னை அழைத்து வருவதைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறோம்.' என்கின்றனர் விஜய்க்கு நெருக்கமான முக்கிய நிர்வாகிகள்.
காவல்துறை தரப்பில் விசாரிக்கையில், 'தவெகவின் எந்தக் கூட்டமாக இருந்தாலும் பழியை தூக்கி காவல்துறை மீது போடுவதுதான் அவர்களின் வழக்கம். முறையாக அனுமதிக் கடிதம் வழங்கி சரியான ஏற்பாடுகளை செய்தால் நாங்கள் எப்போதும் பாதுகாப்பு வழங்க தயாராக இருக்கிறோம். இடத்தை லாக் செய்வதில் அவர்களுக்கு இருக்கும் சிக்கலை காவல்துறை மீது திருப்பி விடுகிறார்கள்.' என்கின்றனர்.

கரூர் தவெக நிர்வாகிகள் குழு ஒன்று இன்று பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் வீடுகளுக்கு நேரில் சென்று இரங்கல் கூட்டத்திற்கு சென்னை வர வேண்டி அழைப்பு விடுத்திருக்கிறது. பாதிக்கப்பட்ட குடும்பத்தினரும் அதை உறுதி செய்கின்றனர்.
தவெகவின் இரண்டாமாண்டு தொடக்கவிழா நடந்த மகாபலிபுரத்திலுள்ள ஒரு தனியார் விடுதியில் இரங்கல் கூட்டத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்படுவதாக கூறுகின்றனர். இப்போதைக்கு அக்டோபர் 27 ஆம் தேதி திங்கட் கிழமை இரங்கல் கூட்டத்தை நடத்தத் திட்டமிட்டிருக்கின்றனர். புயல் எச்சரிக்கையை பொறுத்து தேதியை ஒன்றிரண்டு நாட்கள் தள்ளிப்போடவும் வாய்ப்பிருக்கிறது என்கின்றனர்.















