டிஜிட்டல் இந்தியாவில் கையால் 100 பக்க பட்ஜெட்டை எழுதிய நிதியமைச்சர்! யார் அவர்?
ராய்ப்பூர்: டிஜிட்டல் ஆதிக்க சகாப்தத்தில், 100 பக்க பட்ஜெட்டை கையால் எழுதி தாக்கல் செய்துள்ளார் சத்தீஸ்கர் நிதியமைச்சரும் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியுமான ஓ.பி. செளத்ரி.
முழு பட்ஜெட்டையும் தானே கையால் எழுதி, சத்தீஸ்கர் சட்டப்பேரவையில் தாக்கல் செய்த முதல் நிதியமைச்சர் என்ற பெருமையையும் செளத்ரி பெற்றுள்ளார்.

சத்தீஸ்கர் சட்டப்பேரவையில் நடைபெற்ற பட்ஜெட் தொடரில், 2025-26ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் ஓ.பி.செளத்ரி திங்கள்கிழமை தாக்கல் செய்தார்.
நாடாளுமன்றம் மற்றும் அனைத்து மாநில சட்டப்பேரவைகளிலும் உறுப்பினர்களுக்கு லேப்டாப், டேப் வழங்கப்பட்டு டிஜிட்டல் பட்ஜெட்டாக தாக்கல் செய்யப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், சத்தீஸ்கர் சட்டப்பேரவையில் பழைய முறைப்படி பேப்பரில் திங்கள்கிழமை பட்ஜெட்டை தாக்கல் செய்தார் அமைச்சர் செளத்ரி.
100 பக்கங்கள் கொண்ட பட்ஜெட்டை அமைச்சர் செளத்ரியே மூன்று இரவுகள் இடைவிடாமல் செலவிட்டு எழுதியதாக அவரது நெருங்கிய உதவியாளர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ‘தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ செய்தி நிறுவனத்துக்கு நிதியமைச்சர் ஓ.பி.செளத்ரி அளித்த பேட்டியில் தெரிவித்ததாவது:
“இது பாரம்பரியத்துக்கு திரும்புவதற்கும் உண்மைத்தன்மையை மேம்படுத்துவதற்குமான ஒரு படியாகும். டிஜிட்டல் யுகத்தில் கைகளால் எழுதப்பட்ட பட்ஜெட்டை தாக்கல் செய்வது தனித்துவமான அடையாளத்தையும் வரலாற்று முக்கியத்துவத்தையும் கொண்டுள்ளது. நம்பகத்தன்மையையும் வெளிப்படைத்தன்மையையும் இது ஊக்குவிக்கிறது” என்றார்.
இதையும் படிக்க : கொலை வழக்கு: மகாராஷ்டிர அமைச்சர் ராஜிநாமா!
ஓ.பி. செளத்ரி யார்?
2005 ஆம் ஆண்டு சத்தீஸ்கர் கேடர் ஐஏஎஸ் அதிகாரியாக நியமிக்கப்பட்டவர் ஓ.பி. செளத்ரி. 22 வயதில் வெற்றிபெற்று இளம் ஐஏஎஸ் அதிகாரி என்ற பெருமையை பெற்றவர்.
ராய்ப்பூர் மாவட்ட ஆட்சியராக பொறுப்பு வகித்து வந்த செளத்ரி, 2018-ஆம் ஆண்டு பதவியை ராஜிநாமா செய்துவிட்டு பாஜகவின் இணைந்தார். அந்தாண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளரிடம் தோல்வியை தழுவினார்.
பின்னர், 2023 சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற செளத்ரி நிதியமைச்சராக பொறுப்பேற்றார்.