டிரம்ப்பிடம் மன்னிப்புக் கேட்டார் ஸெலென்ஸ்கி : அமெரிக்கா
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பிடம் உக்ரைன் அதிபர் ஸெலென்ஸ்கி மன்னிப்புக் கேட்டதாக டிரம்ப்பின் சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்காஃப் தெரிவித்தார்.
ரஷிய - உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா மேற்கொண்டு வரும் முயற்சியின் ஒரு பகுதியாக வாஷிங்டனில் இரு வாரங்களுக்கு முன் நடைபெற்ற அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் - உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி இடையேயான சந்திப்பு கடும் வாக்குவாதத்தில் நிறைவுபெற்றது.
அதன் காரணமாக, ஸெலென்ஸ்கியுடனான பேச்சுவாா்த்தையை டிரம்ப் பாதியில் முடித்துக்கொண்டு புறப்பட்டார். இந்த விவகாரம் உலகளவில் பெரிதும் பேசப்பட்டது. வாக்குவாதம் குறித்து டிரம்ப்பிடம் மன்னிப்புக் கேட்க முடியாது என ஸெலென்ஸ்கி முன்பு தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், வெள்ளை மாளிகையில் நடைபெற்ற வாக்குவாதம் தொடர்பாக டொனால்ட் டிரம்ப்புக்கு ஸெலென்ஸ்கி மன்னிப்புக் கடிதம் எழுதியுள்ளதாக அமெரிக்க சிறப்பு தூதர் (மத்திய கிழக்கு) ஸ்டீவ் விட்காஃப் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க | ரஷியாவில் 337 ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்திய உக்ரைன்!
“இதனை முக்கியமான முன்னெடுப்பாகக் கருதுகிறோம். இது தொடர்பாக எங்களின் குழுக்களுக்கும் உக்ரேனியர்கள், ஐரோப்பியர்களுக்கும் இடையே நிறைய விவாதங்கள் மேற்கொள்ளப்பட்டன” என்று விட்காஃப் தெரிவித்தார்.
ரஷியாவுடனான மூன்று ஆண்டுக்கால போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக சவுதி அரேபியாவில் அமெரிக்காவின் சிறப்புத் தூதருடன் உக்ரைன் அமைதி பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது. உக்ரைன் அதிபரின் மன்னிப்புக் கடிதம் இந்த விவகாரத்தில் நல்ல முன்னேற்றமாக இருக்கும் என விட்காஃப் தெரிவித்துள்ளார்.
டிரம்ப் கடந்த வாரம் பேசிய உரையில் ஸெலென்ஸ்கியிடம் இருந்து ஒரு கடிதம் வந்திருப்பதாகக் குறிப்பிட்டார். உக்ரைனுக்கான அமெரிக்காவின் ராணுவ உதவிகளைத் தான் நிறுத்துவதாக அறிவித்த பின்னர் அனுப்பப்பட்ட அந்தக் கடிதத்தை தான் வரவேற்பதாகவும், இதனால் இரு நாடுகளுக்கு இடையேயான உறவு மேம்படும் என்றும் அவர் பேசியது குறிப்பிடத்தக்கது.
ஸெலென்ஸ்கி நேற்று சவுதி இளவரசர் முகமது பின் சல்மானைச் சந்தித்தார். ”உலக விவகாரங்களில் அவரது பரந்துவிரிந்த பார்வை, உக்ரைனுக்கான ஆதரவு ஆகியவற்றிக்கும் நான் நன்றியுள்ளவனாகிறேன். உக்ரைன் எதிர்காலத்திற்கான நம்பிக்கையான வார்த்தைகளைக் கேட்பது மிக முக்கியமானது” என்று தனது எக்ஸ் தளத்தில் அந்தச் சந்திப்பு குறித்து பதிவிட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, அமைதிப் பேச்சுவார்த்தை இந்த வாரம் நடைபெறும் என்று கூறப்படுகிறது.