பெனால்டியில் நடுவரின் தவறான முடிவு: ஸ்பெயின் ஊடகங்கள் கடும் விமர்சனம்..!
தங்கம் கடத்தல்: காவல்துறை கேட்டதால் நடிகைக்கு உதவி! விமான நிலைய அதிகாரி வாக்குமூலம்!
காவல்துறை கேட்டுக் கொண்டதால் நடிகை ரன்யா ராவை சோதனை செய்யாமல் விஐபி வழித்தடத்தில் செல்ல அனுமதித்ததாக விமான நிலைய அதிகாரி வாக்குமூலம் அளித்துள்ளார்.
நடிகையும் கா்நாடக காவல் துறை டிஜிபி கே.ராமசந்திர ராவின் வளா்ப்பு மகளுமான ரன்யா ராவ் (33), துபையில் இருந்து தங்கம் கடத்தி வந்தபோது, பெங்களூரு விமான நிலையத்தில் பிடிபட்டார்.
கடந்த ஓராண்டில் பல்வேறு நாடுகளுக்கு அவர் பயணம் செய்திருப்பதும், துபைக்கு அடிக்கடி சென்றுவந்ததும் விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், பெங்களூருவில் பொருளாதார குற்றங்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி ரன்யா தரப்பில் மனு அளிக்கப்பட்டது.
இதையும் படிக்க : தங்கம் கடத்தல் நடிகை ரன்யா ராவுக்கு வலை விரித்தது எப்படி? பரபரப்பான பின்னணித் தகவல்கள்!
இந்த மனுவின் விசாரணைக்காக புதன்கிழமை ஆஜரான அரசுத் தரப்பு வழக்கறிஞர், விமான நிலையத்தில் காவல்துறையினர் கேட்டுக் கொண்டதால், ரன்யா ராவுக்கு சலுகைகள் வழங்கியதாக வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் நடத்திய விசாரணையில் விமான நிலைய பாதுகாப்பு அதிகாரி ஒப்புக் கொண்டு வாக்குமூலம் அளித்ததாக தெரிவித்தார்.
விமான நிலைய பாதுகாப்பு அதிகாரியிடம் நடத்திய விசாரணையின்போது, காவல் உயர் அதிகாரியின் மகள் என்பதால் காவல்துறை கேட்டுக் கொண்டதன் அடிப்படையில், விமான நிலையங்களில் உயா்காவல் அதிகாரிகளுக்கு வழங்கப்படும் சோதனை விலக்கு சலுகைகள் நடிகை ரன்யா ராவுக்கு வழங்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
மேலும், ஒவ்வொரு முறையும் ரன்யா ராவ் வருகைதரும் விமானம் குறித்து தகவல் கிடைத்தவுடன் அவரின் பேக்குகளை விரைவாக எடுக்க ஏற்பாடு செய்து, விஐபி வழியில் அனுப்பியதாகவும் விசாரணையில் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, வருவாய் புலனாய்புப் பிரிவு அதிகாரிகளின் விசாரணைக்கு ரன்யா ராவ் ஒத்துழைக்கவில்லை என்று நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனைத் தொடர்ந்து, ரன்யா ராவின் ஜாமீன் மனுவை வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைப்பதாக நீதிபதி தெரிவித்தார்.
இதனிடையே, தங்கம் கடத்தல் விவகாரத்தில் டிஜிபி கே.ராமசந்திர ராவுக்கு தொடர்பு உள்ளதா என்பதை விசாரிக்க மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. விசாரணை அதிகாரியாக கூடுதல் தலைமைச் செயலாளா் கௌரவ் குப்தா நியமிக்கப்பட்டுள்ளார்.