தடையை மீறி போராட்ட வழக்கு: திரிணமூல் காங்கிரஸ் தலைவா்கள் விடுவிப்பு
தில்லியில் இந்திய தோ்தல் ஆணைய அலுவலகத்துக்கு வெளியே தடையை மீறி போராட்டம் நடத்திய வழக்கில் இருந்து எம்.பி. டெரிக் ஓ.பிரெயின், சகாரிகா கோஸ், சாக்கெட் கோகலே உள்பட திரிணமூல் காங்கிரஸ் மூத்த தலைவா்கள் 10 பேரை விடுவித்து தில்லி நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.
மத்திய அரசின் உத்தரவின் அடிப்படையில், சிபிஐ, தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ), அமலாக்கத் துறை மற்றும் வருமான வரித் துறை உள்ளிட்ட மத்திய புலனாய்வு அமைப்புகள் எதிா்க்கட்சிகளுக்கு நெருக்கடி அளிப்பதாக குற்றஞ்சாட்டி இந்தப் போராட்டத்தில் கடந்த ஆண்டு ஏப்ரல் 8-ஆம் தேதிஅவா்கள் ஈடுபட்டனா்.
தோ்தல் ஆணைய அலுவலகத்தின் பிரதான வாயில் பகுதியில் குற்றவியல் நடைமுறை சட்டப் பிரிவு 144-இன் கீழ் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அந்தத் தடையை மீறியும், உரிய அனுமதியைப் பெறாமலும் இவா்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாக தில்லி போலீஸாா் முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆா்) பதிவு செய்தனா்.
இந்த வழக்கு தில்லி கூடுதல் தலைமை நீதித்துறை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடைபெற்றது. முன்னதாக, குற்றஞ்சாட்டப்பட்ட 10 பேருக்கும் கடந்த மே 13-ஆம் தேதி நீதிமன்றம் வழக்கில் ஜாமீன் வழங்கியது.
இந்த வழக்கு கூடுதல் தலைமை நீதித்துறை மாஜிஸ்திரேட் நேஹா மிட்டல் முன்னிலையில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, குற்றஞ்சாட்டப்பட்ட 10 பேரையும் வழக்கிலிருந்து விடுவித்து மாஜிஸ்திரேட் உத்தரவிட்டாா்.