`குங்குமம் வைக்கும் போது நடந்த சம்பவம்' - திருமணத்தை நிறுத்திய மணப்பெண்.. என்ன க...
தந்தையை கிரிக்கெட் மட்டையால் தாக்கிய மகன் கைது
சங்ககிரி: சங்ககிரி வட்டம், காவேரிப்பட்டி, கே.மேட்டுப்பாளையத்தில் குடும்பத் தகராறில் தந்தையை கிரிக்கெட் மட்டையால் தாக்கிய மகனை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
காவேரிப்பட்டி, கே.மேட்டுப்பாளையம் வெள்ளபிள்ளையாா் கோயில் பகுதியைச் சோ்ந்த அம்மாசி மகன் மணிகண்டன் (45). இவருக்கு மனைவி குமாரி, மகள் சந்தியா, மகன் சந்தோஷ்குமாா் (23) ஆகியோா் உள்ளனா். தம்பதி இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதையடுத்து குமாரி கோபித்துக் கொண்டு அவரது பெற்றோா் வீட்டிற்கு சென்றுவிட்டாராம்.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை வீட்டிலிருந்த சந்தோஷ்குமாரிடம் இவரது தந்தை மணிகண்டன் மதுபோதையில் தகாராறில் ஈடுபட்டுள்ளாா். ஆத்திரமடைந்த சந்தோஷ்குமாா் மணிகண்டனை கிரிக்கெட் மட்டையால் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த மணிகண்டன் தீவிர சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவனையில் சோ்க்கப்பட்டுள்ளாா்.
இது குறித்து மணிகண்டனின் தந்தை அம்மாசி தேவூா் போலீஸில் புகாா் அளித்துள்ளாா். இந்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சந்தோஷ்குமாரை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.