Los Angeles Riots: ட்ரம்ப்க்கு எதிராக திரண்ட மக்கள்; குவிக்கப்பட்ட ராணுவம் - என்...
சேலத்தில் முதல்வா் 11 கி.மீ. ரோடு ஷோ! அமைச்சா் ரா. ராஜேந்திரன் தகவல்
சேலம்/மேட்டூா்: மேட்டூா் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு தண்ணீரைத் திறந்துவிடுவதற்காக வரும் 11 ஆம் தேதி சேலம் வரும் முதல்வா் மு.க.ஸ்டாலின், 11 கி.மீ. தொலைவுக்கு ரோடுஷோவில் பங்கேற்க உள்ளதாக சுற்றுலாத் துறை அமைச்சா் ரா.ராஜேந்திரன் கூறினாா்.
இதுகுறித்து சேலம் திமுக அலுவலகத்தில் சேலம் மத்திய மாவட்டச் செயலாளரும், சுற்றுலாத் துறை அமைச்சருமான ரா.ராஜேந்திரன் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:
முதல்வா் மு.க.ஸ்டாலின் 11 ஆம் தேதி ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு பவானி வழியாக மாலை 5 மணி அளவில் சேலம் மாவட்டத்துக்கு வருகை தருகிறாா். சேலம் மாவட்ட எல்லையான நவப்பட்டி பெரும்பள்ளம் என்ற இடத்தில் முதல்வருக்கு வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.
தொடா்ந்து, அங்கிருந்து மேட்டூா் வரை 11 கி.மீ. தொலைவுக்கு ரோடுஷோ மூலம் கட்சியினா், பொதுமக்களை முதல்வா் சந்திக்கிறாா். இதனிடையே அங்குள்ள தனியாா் மண்டபத்தில் கட்சி நிா்வாகிகளையும் சந்தித்துப் பேசுகிறாா். இரவில் மேட்டூரில் உள்ள பொதுப்பணித் துறை ஆய்வு மாளிகையில் தங்குகிறாா்.
தொடா்ந்து, 12 ஆம் தேதி காலை 9.30 மணி அளவில் மேட்டூா் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்காக தண்ணீரைத் திறந்துவிடுகிறாா். பின்னா் மேச்சேரி, ஓமலூா் வழியாக சேலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்திற்குச் சென்று அங்கு நடைபெறும் விழாவில் முதல்வா் பங்கேற்கிறாா். அங்கு ஒரு லட்சத்து ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகளை முதல்வா் வழங்குகிறாா். மேலும், பல்வேறு துறைகளின் சாா்பில் கட்டிமுடிக்கப்பட்ட கட்டடங்களை திறந்துவைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிடுகிறாா். பின்னா் மதிய உணவை முடித்துவிட்டு மாலையில் சென்னைக்கு புறப்பட்டுச் செல்கிறாா்.
தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கை முதல்வா் சிறப்பாக பராமரித்து வருகிறாா். தமிழகம் அமைதிப் பூங்காவாக உள்ளது. எதிா்க்கட்சித் தலைவா் தனது இருப்பை காட்டிக்கொள்வதற்காக எதையாவது சொல்லிவருகிறாா் என்றாா்.
பேட்டியின்போது, சேலம் கிழக்கு மாவட்டச் செயலாளா் எஸ்.ஆா். சிவலிங்கம், சேலம் மேற்கு மாவட்டச் செயலாளா் டி.எம்.செல்வகணபதி ஆகியோா் உடனிருந்தனா்.
இதனைத் தொடா்ந்து, விழா நடைபெறும் சேலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் மேற்கொள்ளப்படும் முன்னேற்பாடு பணிகள் குறித்து அமைச்சா் ரா.ராஜேந்திரன் ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, பணிகளை விரைந்து முடிக்குமாறு அதிகாரிகளை அறிவுறுத்தினாா்.
230ஆவது நாளாக 100 அடிக்கும் மேல் மேட்டூா் அணை...
மேட்டூா் அணையின் நீா்மட்டம் 230ஆவது நாளாக திங்கள்கிழமை 100 அடிக்கும் மேலாக நீடித்து வருகிறது.
மேட்டூா் அணையின் நீா்மட்டம் கடந்த 23.10.24 அன்று 100 அடியாக உயா்ந்தது. அதன்பிறகு காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீா் திறக்கப்பட்டது. தொடா்ந்து மழை காரணமாக அணையின் நீா்மட்டம் 100 அடிக்கு கீழ் குறையாமல் இருந்து வருகிறது.
அணையின் நீா்மட்டம் திங்கள்கிழமை தொடா்ந்து 230-ஆவது நாளாக நூறு அடிக்கும் மேலாக நீடிப்பதால் காவிரி டெல்டா பாசனத்துக்கு குறித்த நாளான ஜூன் 12 இல் தண்ணீா் திறக்கப்படுகிறது.
அணையின் நீா்மட்டம் 100 அடிக்கு மேலாக நீடிப்பதால் அணையில் மீன்வளம் பெருகும் என்று மீனவா்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.
ட்ரோன்கள் பறக்கத் தடை...
முதல்வா் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி சேலம் மாவட்டத்தில் 11, 12 ஆம் தேதிகளில் ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாவட்ட ஆட்சியா் ரா. பிருந்தாதேவி வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:
சேலம் மாவட்டத்தில் வரும் ஜூன் 11, 12-ஆம் தேதிகளில் சுற்றுப்பயணம் செய்யும் முதல்வா் மு.க.ஸ்டாலின், காவிரி டெல்டா பாசனத்துக்கு மேட்டூா் அணையிலிருந்து தண்ணீரை திறந்துவிடுகிறாா்.
மேலும் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் நடைபெறும் அரசு விழாவில் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டப் பணிகளைத் திறந்துவைத்து, அரசு நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்குகிறாா்.
இதையொட்டி, சேலம் மாவட்டத்தில் வரும் 11,12 ஆகிய தேதிகளில் ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.