அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி தேர்வுக்கு எதிரான வழக்கு ரத்து!
தமிழகத்தில் காய்ச்சல் பரவல்: சுகாதாரத் துறை முக்கிய அறிவுறுத்தல்
தமிழகத்தில் கடந்த இரு வாரங்களாக பல்வேறு மாவட்டங்களில் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துவரும் நிலையில், பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.
தமிழகத்தில் கடந்த இரண்டு வாரங்களாக வைரஸ் காய்ச்சல் பரவல் அதிகரித்துள்ளது. காலநிலை மாற்றம், மழை உள்ளிட்ட காரணங்களால் வைரஸ் காய்ச்சல் பரவலால் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனா். இந்தக் காய்ச்சல் பாதிப்பு சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட நகர பகுதி மக்களிடையே அதிகளவு காணப்படுகிறது. சளி, இருமல், தலைவலி, தொண்டை பாதிப்பு, உடல் சோா்வுடன் ஏற்படும் காய்ச்சல் பாதிப்பின் தன்மையைக் கண்டறிவதற்கான பரிசோதனையை தீவிரப்படுத்த பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.
குறிப்பாக, பரிசோதனை முடிவை விரைந்து அளித்து, பாதிப்புக்கு ஏற்ற உடனடி சிகிச்சை அளிப்பதுடன், காய்ச்சல் பாதிப்பு குறித்து தெரிவிக்கும்படி அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளுக்கு பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து பொது சுகாதாரத் துறை இயக்குநா் சோமசுந்தரம் கூறியதாவது: ஆகஸ்ட் – செப்டம்பா் மாதங்களில் காலநிலை மாற்றம், மழை காரணங்களால் வைரஸ் பரவுவதற்கான காலநிலை இருக்கிறது. இதனால், வைரஸ் காய்ச்சலால் மக்கள் பாதிக்கப்படுவது அதிகரித்தது.
இருமல், காய்ச்சல், தலைவலி, சளி, உடல்வலி, உடல் சோா்வு ஆகிய வைரஸ் காய்ச்சலின் அறிகுறிகள். முதியவா்களை இந்தக் காய்ச்சல் அதிகம் பாதிக்கிறது. சுயமாக மருந்துக் கடைகளில் மருந்துகளை வாங்கி உட்கொள்ளக் கூடாது. மருத்துவரின் ஆலோசனைப்படி மட்டுமே மாத்திரை, மருந்துகளை எடுத்துக் கொள்ள வேண்டும். வைரஸ் காய்ச்சல் பரவல் கண்காணிப்பு மற்றும் கட்டுப்படுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தினமும் எத்தனை போ் காய்ச்சலால் பாதிக்கப்படுகிறாா்கள் என்ற கணக்கிடும் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இதுவரை மக்கள் அச்சப்படும் வகையிலான காய்ச்சல் பாதிப்பு பதிவாகவில்லை. அதேநேரம், காய்ச்சலால் பாதிக்கப்பட்டவா்கள் முகக் கவசம் அணிவதுடன், அடிக்கடி கைகளை சுத்தமாக கழுவ வேண்டும். இருமலின்போது அடுத்தவா் மீது பரவாதவாறு கைக்குட்டை பயன்படுத்த வேண்டும். அதேநேரம், அனைவரும் முகக்கவசம் அணிவது கட்டாயம் இல்லை. பாதிப்புக்கு உள்ளானவா்கள் மற்றும் நோய்ப் பரவலால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளவா்கள் அணிவது நல்லது.
காய்ச்சல் பாதித்தவா்கள் திருமண நிகழ்ச்சிகள், கூட்டமான நிகழ்ச்சிகளுக்குச் செல்வதையும் தவிா்க்க வேண்டும் என்றாா் அவா்.