தமிழகத்தில் பொருளாதார ஆய்வறிக்கை வெளியிடப்பட்டது ஏன்?
தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை பேரவையில் நாளை தாக்கல் செய்யப்படவிருக்கும் நிலையில், பொருளாதார ஆய்வறிக்கை இன்று வெளியிடப்பட்டுள்ளது.
பொதுவாக, மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை தாக்கலின்போதுதான் அதற்கு முந்தைய நாள், பொருளாதார ஆய்வறிக்கை வெளியிடப்படும்.
மத்திய அரசின் நிதிநிலை எவ்வாறு உள்ளது என்பதை வெளிப்படுத்தும் வகையில் பொருளாதார ஆய்வறிக்கை அமைந்திருக்கும். ஆனால் தற்போது தமிழக அரசு முதல் முறையாக பொருளாதார ஆய்வறிக்கையை வெளியிட்டிருக்கிறது.
நாளை பேரவையில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பொருளாதா ஆய்வறிக்கையை இன்று வெளியிட்டுள்ளார்.
இதனால், திடீரென, தமிழக அரசு பொருளாதார ஆய்வறிக்கையை வெளியிட காரணம் என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கு காரணங்கள் பல இருக்கலாம் என்றாலும், பொதுவான தகவலாக, தமிழக அரசுக்கு கடன் அதிகரித்திருப்பதாக அண்மைக்காலமாக சமூக வலைதளங்களிலும், ஊடகங்களிலும் தகவல்கள் வெளியாகி வருகிறது. எதிர்க்கட்சிகளும் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்து வருகிறார்கள்.
இந்தநிலையில், நாட்டிலேயே அதிகக் கடன் வாங்கியிருக்கும் மாநிலமாக தமிழகம் உள்ளது என்று நாடாளுமன்றத்திலும் ஒரு சில நாள்களுக்கு முன்பு மத்திய அரசால் தெரிவிக்கப்பட்டது.
இதனால், தமிழக அரசு அதிகக் கடன் வாங்குவதாக மக்கள் கருதக்கூடாது என்பதற்காகவும், அந்தக் கடன் தொகை நல்ல முறையில், மாநிலத்தின் வளர்ச்சிக்காகவே செலவிடப்பட்டு, அதனால் மாநிலம் வளர்ச்சியடைந்து, அந்தக் கடன் தொகை விரைவாக திரும்ப செலுத்தப்படும் என்பதை மக்களுக்குத் தெரியப்படுத்தவும்தான் இந்த பொருளாதார ஆய்வறிக்கையை தயாரிக்கப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
அதுபோல, தமிழக அரசு வளர்ச்சிப்பாதையில் தான் உள்ளது, நலத்திட்டங்களை செயல்படுத்தவே கடன் பெறுகிறது என்று இந்த பொரருளாதார ஆய்வறிக்கை மூலம் தெளிவுபடுத்தப்படலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
வரும் 2026ஆம் ஆண்டில் தமிழகப் பேரவைத் தேர்தல் நடைபெற இருப்பதால் முக்கிய அறிவிப்புகள் ஏதாவது வெளியாக வாய்ப்பு இருப்பதாகவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில்தான், தமிழக அரசு, தனது முதல் பொருளாதார ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. இதில் தமிழகத்தின் பொருளாதாரப் போக்கு, பொதுநிதி, வறுமை, வேலைவாய்ப்பு மற்றும் நிலையான வளா்ச்சி இலக்குகள் குறித்த விவரம் இடம்பெற்றுள்ளன.
மத்திய அரசின் நடைமுறையில் பொருளாதார ஆய்வறிக்கை நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுவதற்கு ஒருநாள் முன்பு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும். அதுபோலவே, தமிழகத்தில் நிதிநிலை அறிக்கை தாக்கலுடன் அமா்வு நாளை தொடங்குகிறது. இதனால் பொருளாதார ஆய்வறிக்கை இன்று வெளியிடப்பட்டுள்ளது.
நாட்டில், கேரளம், கா்நாடகம் மற்றும் ஆந்திரம் உள்ளிட்ட தென்மாநிலங்களிலும் இத்தகைய முறை ஏற்கெனவே நடைமுறையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.