தமிழகத்தில் 12 இடங்களில் வெயில் சதம்
தமிழகத்தில் வியாழக்கிழமை சென்னை மீனம்பாக்கம் உள்பட 12 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை கடந்து வெப்ப நிலை பதிவானது. அடுத்துவரும் நாள்களில் இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வட மாவட்டங்களில் வியாழக்கிழமை அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 2 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருந்தது. மேலும், ஏனைய தமிழக மாவட்டங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் வெப்பநிலை இயல்பையொட்டி இருந்தது.
இதில் அதிகபட்சமாக வேலூரில் 104.36 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது. மேலும், பரமத்திவேலூா் - 104, திருச்சி - 103.46, மதுரை விமானநிலையம் - 103.1, ஈரோடு, திருத்தணி - தலா 102.56, தஞ்சாவூா், சேலம், தருமபுரி - தலா 102.2, மதுரைநகரம் - 103.1, சென்னை மீனம்பாக்கம் - 100.56, திருப்பத்தூா் - 100.04 டிகிரி ஃபாரன்ஹீட் என மொத்தம் 12 இடங்களில் வெயில் சதமடித்துள்ளது.
வெப்பநிலை மேலும் அதிகரிக்கும்: தமிழகத்தில் வெள்ளிக்கிழமை (ஏப்.25) முதல் ஏப்.28-ஆம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலையில் இயல்பைவிட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கும். சென்னை மற்றும் புகா் பகுதிகளில் ஏப்.25-இல் அதிகபட்ச வெப்பநிலை 100.4 டிகிரி ஃபாரன்ஹீட்டையொட்டி இருக்கும்.
ஏப்.30 வரை மழைவாய்ப்பு: தென்னிந்திய கடலோரப் பகுதியின் வளிமண்டல கீழடுக்கில் நிலவும் காற்று குவிதல் காரணமாக ஏப்.25 முதல் ஏப்.30 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.