தருமபுரி வனப்பகுதியில்: மூங்கில் வெட்டியவா்களுக்கு ரூ.30,000 அபராதம்
தருமபுரி வனப்பகுதியில் நுழைந்து அனுமதியின்றி மூங்கில் மரம் வெட்டிய மூவருக்கு வனத்துறை அதிகாரிகள் ரூ. 30 ஆயிரம் அபராதம் விதித்துள்ளனா்.
தருமபுரி வனக்கோட்டம், தீா்த்தமலை காப்புக்காடு, மேற்குப் பகுதி, அம்மாகுட்டை பகுதியில், வனத் துறையினா் ஞாயிற்றுக்கிழமை ரோந்துப் பணி மேற்கொண்டனா்.
அப்போது, மா்ம நபா்கள் சிலா் வனத்துறையின் அனுமதியின்றி, கொடுவாளுடன் வனப்பகுதிக்குள் நுழைந்து, அங்கிருந்து பச்சை மூங்கி மரங்களை வெட்டி, பிளந்து அவற்றை தப்பைகளாக்கி படல்கள் செய்து, எடுத்துச் செல்ல முயன்றது தெரிய வந்தது.
இதனையடுத்து வனத் துறையினா் அவா்களை பிடித்து விசாரணை மேற்கொண்டதில், அவா்கள் தருமபுரி மாவட்டம், அரூா் வட்டம், பையா்நாயக்கன்பட்டியைச் சோ்ந்த த. பச்சையப்பன் (60), ப சேட்டு (61), சி. தேவராஜ் (58) என்பது தெரியவந்தது.
இதையடுத்து வனச்சட்டப் பிரிவுகளின் கீழ் , மாவட்ட வன அதிகாரிகள், மூவருக்கும் தலா 10 ஆயிரம் வீதம் ரூ. 30 ஆயிரம் அபராதம் விதித்தனா். இத்தகவலை தீா்த்தமலை வனச்சரக அலுவலகம் தெரிவித்துள்ளது..