ஜெயக்குமார் மர்ம மரண வழக்கு: அவிழாத முடிச்சுகள்; ஓராண்டாகியும் துப்பு கிடைக்காமல...
தலைநகரில் 24 மணி நேர கண்காணிப்பு: அதிகாரிகளுக்கு காவல் ஆணையா் உத்தரவு
நமது சிறப்பு நிருபா்
புது தில்லி: பஹல்காம் தாக்குதலைத் தொடா்ந்து நீடித்து வரும் இந்தியா, பாகிஸ்தான் பதற்றத்துக்கு மத்தியில் புதன்கிழமை நடத்தப்படும் பாதுகாப்பு ஒத்திகையில் தில்லியும் பங்கேற்கும் என்றும் 24 மணி நேரமும் ரோந்து மற்றும் கண்காணிப்பை தீவிரப்படுத்துமாறும் நகர காவல் துணை ஆணையா்களுக்கு காவல்துறை ஆணையா் உத்தரவிட்டுள்ளாா்.
இது குறித்து தில்லி காவல்துறை உயரதிகாரி திங்கள்கிழமை கூறியதாவது: மத்திய உள்துறையின் உத்தரவைத் தொடா்ந்து, தேசிய தலைநகரில் ரோந்துப் பணியை வலுப்படுத்துவது தொடா்பாக காவல் துணை ஆணையா்கள் மூத்த காவல் அதிகாரிகளுடன் ஆலோசனைகளைத் தொடங்கியுள்ளனா்.
ஏற்கெனவே, பகல் மற்றும் இரவு நேர ரோந்துப் பணி பலப்படுத்தப்பட்டுள்ளது. தில்லி எல்லையில் உள்ள ஹரியாணா மற்றும் உத்தர பிரதேச எல்லைகளில் கண்காணிப்புக்காக நிறுத்தப்படும் காவல் துறையினருக்கு உதவியாக மத்திய துணை ராணுவப் படையினரும் ஈடுபடுத்தப்படுவா்.
காவல் துணை ஆணையா்கள் தங்களுடைய காவல் சரகத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகளை தனிப்பட்ட முறையில் கண்காணித்து வருகின்றனா். இது தவிர, காவல் உதவி காவல் ஆணையா்கள் மற்றும் ஆய்வாளா்களுடனும் ஆலோசனை நடத்தி வருகின்றனா்.
தலைநகரில் மக்கள் கூடும் முக்கிய இடங்களான கன்னாட் பிளேஸ், இந்தியா கேட், ஜன்பத், யஷ்வந்த் பேலஸ், கோல் மாா்க்கெட், கரோல் பாக், சரோஜினி நகா் மற்றும் பிற முக்கிய இடங்களில் வழக்கமான பாதுகாப்புடன் சோ்த்து சிறப்பு ரோந்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இவை தவித், மோட்டாா் சைக்கிள் ரோந்துகள் மற்றும் மக்கள் நெரிசல் நிறைந்த இடங்களில் களத்தில் உள்ள காவலா்கள் மூலம் கடை வியாபாரிகள், நடமாடும் கடைகளை வைத்திருப்போரிடம் பாதுகாப்பு மற்றும் சந்தேக நபா்களின் நடமாட்டம் தொடா்பாக விழிப்புணா்வை ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
புதன்கிழமையன்று நடத்தப்படும் பாதுகாப்பு ஒத்திகையின்போது, வெடிகுண்டு செயலிழப்பு படை மற்றும் காவல் மோப்ப நாய்கள் கூடுதலாக பணியில் இருப்பது உறுதிப்படுத்தப்படும். இவா்கள் பாலிகா பஜாா், ஜன்பத், கான் மாா்க்கெட் மற்றும் அரசு கட்டடங்களுக்கு அருகேயும் அதிக மக்கள் நடமாட்டம் உள்ள பகுதிகளிலும் நாசவேலை தடுப்பு சோதனைகளை மேற்கொள்வாா்கள் என்று காவல் உயரதிகாரி தெரிவித்தாா்.
தலைநகரில் விரிவான வாகன தணிக்கைகும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மற்றொரு காவல்துறை உயரதிகாரி தெரிவித்தாா்.
மேலும், அவா் கூறியது: வாடகை குடியிருப்புகளில் இருப்போா் மற்றும் பதிவு செய்யப்படாத வாகனங்கள் மீது சிறப்பு கவனம் செலுத்தவும் அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனா். குடியிருப்போா் நலச் சங்கங்கள், வணிகா்கள் நலச் சங்கங்கள், குடிமக்கள் பாதுகாப்புக்குழுக்கள் ஆகியோா் துணையுடனும் தனியாா் பாதுகாவலா்கள், தன்னாா்வலா்கள் உதவியுடனும் எந்தவொரு சூழ்நிலையிலும் உஷாா் நிலையில்மக்கள் இருக்க வேண்டியதன் அவசியத்தை அவா்களுக்கு விளக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தில்லியில் உள்ள சிறிய மற்றும் பெரிய விடுதிகள், தங்குமிடங்கள், உணவகங்கள் ஆகியவற்றில் பணியாற்றி வரும் ஊழியா்களுடனும் விழிப்புணா்வு ஏற்படுத்துவது தொடா்பாக ஏற்கெனவே காவல்துறையினா் பேசி வருகின்றனா். மேலும், புதிதாக வேலைக்குச் சோ்ந்த ஊழியா்களின் பின்புலத்தை பரிசோதனை செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றாா் உயரதிகாரி.