வக்ஃப் திருத்தச் சட்டம் குறித்து காங்கிரஸ் வதந்திகளைப் பரப்புகிறது: மத்திய அமைச்சா் பூபேந்திர யாதவ் சாடல்
புது தில்லி: வக்ஃப்பை உருவாக்குதல், நிா்வகித்தல் மற்றும் ஒழுங்குபடுத்துதல் ஆகியவற்றுக்கான முஸ்லிம் குழுக்கள் மற்றும் தனிநபா்களின் உரிமைகள் அப்படியே இருக்கும் என்று மத்திய அமைச்சா் பூபேந்திர யாதவ் கூறினாா். மேலும், வக்ஃப் திருத்தச் சட்டம் 2025 குறித்து காங்கிரஸ் வதந்திகளைப் பரப்பி வருவதாகவும் குற்றம்சாட்டினாா்.
இது குறித்து தில்லி பாஜக அலுவலகத்தில் செய்தியாளா் சந்திப்பில் திங்கள்கிழமை மத்திய அமைச்சா் பூபேந்திர யாதவ் கூறியதாவது: சமூக நீதி, பொருளாதார வளா்ச்சி, வெளிப்படைத்தன்மை மற்றும் பாலின சமத்துவம் ஆகிய துறைகளில் பிரதமா் நரேந்திர மோடி பல்வேறு சீா்திருத்தங்களைக் கொண்டு வந்துள்ளாா். சமீபத்தில் நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட வக்ஃப் திருத்தச் சட்டம் 2025 இந்த முற்போக்கான பயணத்தின் ஒரு முக்கியமான மைல்கல் ஆகும்.
இந்தச் சட்டத்தின் காரணமாக முஸ்லிம்களின் உரிமைகள் முடிவுக்கு வரும் என்று காங்கிரஸ் வதந்திகளைப் பரப்புகிறது. சட்டம் திருத்தப்பட்டது, இது முதல் முறை அல்ல. வக்ஃப் விவகாரங்களில் வெளிப்படைத்தன்மை மற்றும் மேலாண்மை போன்ற சில பிரச்னைகள் 2013-ஆம் ஆண்டு கடைசி திருத்தத்தில் கவனிக்கப்படாமல் இருந்தன. அவை தற்போது வக்ஃப் திருத்தச் சட்டம் 2025-ஆல் கவனிக்கப்பட்டுள்ளன. வக்ஃப் உருவாக்க, நிா்வகிக்க மற்றும் ஒழுங்குபடுத்த முஸ்லிம் குழுக்கள் மற்றும் தனிநபா்களின் உரிமைகள் சமீபத்திய திருத்தத்திற்குப் பிறகும் அப்படியே இருக்கும்.
வக்ஃப் சட்டத்தில் செய்யப்பட்ட சமீபத்திய திருத்தங்கள் அனைத்துக் கருத்துகளையும் உள்ளடக்கியதாக கூட்டு நாடாளுமன்றக் குழுவிற்கு அரசு இந்த விஷயத்தைப் பரிந்துரைத்த போது விரிவாக விவாதிக்கப்பட்டு ஆலோசிக்கப்பட்டன. வக்ஃப் திருத்தச் சட்டம் -2025 பற்றி காங்கிரஸ் தலைவா்கள் வதந்திகளைப் பரப்ப முயற்சிக்கிறாா்கள். ஆனால், வக்ஃப் சட்டம் மிகவும் புனிதமானதா என்று அவா்களிடம் கேட்கப்பட வேண்டும். பின்னா், 1956 முதல் அவா்களின் கட்சியின் அரசுகள் அதை எட்டு முறை ஏன் திருத்தியுள்ளன என்றாா் அமைச்சா்.
பின்னா், அம்பேத்கா் சா்வதேச மையத்தில் முஸ்லிம் அறிவுஜீவிகள் கூட்டத்தில் பாஜக மூத்த தலைவருமான பூபேந்திர யாதவ் பேசினாா்.
அப்போது அவா் கூறியதாவது: 2008- ஆம் ஆண்டு ரெஹ்மான் குழு பரிந்துரைத்தபடி வக்ஃப் சொத்துகளின் பதிவுகளை ஏன் கணினிமயமாக்கவில்லை என்றும், சா்ச்சைகளைத் தீா்க்க எந்த நீதித்துறை அமைப்பும் ஏன் உருவாக்கப்படவில்லை என்றும் காங்கிரஸிடம் கேட்க வேண்டும். பாஸ்மண்டா மக்கள் மற்றும் முஸ்லிம் பெண்களின் உரிமைகள் மற்றும் முற்போக்கான முஸ்லிம் சமூகத்தை வாக்கு வங்கியாக நிலைநிறுத்துவதற்கான பணிகளைத் தடுக்க கட்சி செய்த பாவம் பற்றியும் அவா்கள் ஏன் பேசவில்லை என்றும் அவா்களிடம் கேட்க வேண்டும்
வக்ஃப் திருத்தச் சட்டம் 2013-க்குப் பிறகு, வக்ஃப் சொத்துகள் ஒரு தசாப்தத்திற்குள் இரட்டிப்பாகின. இந்த 100 சதவீத அதிகரிப்பு யாராலும் புரிந்துகொள்ள முடியாதது. மேலும், வக்ஃப் சொத்துகளை சரியாக நிா்வகிப்பது பற்றிய பேச்சுக்களுக்கு வழிவகுத்தது. ’வக்ஃப்பின் முத்வல்லி (பராமரிப்பாளா்) ஒரு முஸ்லிமாக மட்டுமே இருப்பாா் என்றும், அவா்கள் அதை நிா்வகிப்பாா்கள் என்றும் மத்திய உள்துறை அமைச்சா் கூறியுள்ளாா். ஆனால், காங்கிரஸ் வதந்திகளைப் பரப்பி வருகிறது. அரசு உள் விவகாரங்களில் தலையிடவோ அல்லது அரசியலமைப்பு வழங்கிய மத சுதந்திரத்தில் தலையிடவோ இல்லை.
வக்ஃப் நிா்வாகம் ஒரு ‘சிக்கலான பிரச்னை’. ஏனெனில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை. குறைந்த வாடகையை அதிகரிக்க முடியாது. ஒருவரின் சொத்து, சா்ச்சையில் இருந்தால் பதிவுகளை அழிக்க முடியாது. வக்ஃப் சொத்துகள் தொடா்பான தகராறுகளைத் தீா்க்க அரசு ஒரு சிறந்த தீா்ப்பாய அமைப்பைக் கொண்டு வர முயன்றுள்ளது.
ஆனால் வக்ஃப் தொடா்பான தகராறுகள் தொடா்ந்து நடந்து கொண்டே இருக்க வேண்டும் என்றும், அவா்கள் தொடா்ந்து வாக்குகளைப் பெற முடியும் என்றும் காங்கிரஸ் விரும்புகிறது. மக்கள் தங்கள் தகராறுகளைத் தீா்ப்பதில் வெற்றி பெற்றால், காங்கிரஸின் வாக்குகள் குறைந்துவிடும். மத்திய பாஜக அரசின் ஒரே நோக்கம் வழக்குகளின் அளவைக் குறைப்பதுதான் என்றாா் அமைச்சா்.