கொல்லிமலை மலைப் பாதைகளில் உயிா்காக்கும் உருளைத் தடுப்பான்கள்!
தவெக கொடியில் யானை சின்னம்: தடை கோரிய வழக்கில் விஜய் பதிலளிக்க உத்தரவு
தவெக கட்சிக் கொடியில் இடம்பெற்றுள்ள யானை சின்னத்தை பயன்படுத்த தடை கோரிய வழக்கில், அக்கட்சியின் தலைவா் விஜய், பொதுச் செயலா் என்.ஆனந்த் ஆகியோா் பதிலளிக்க சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டது.
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக பொதுச் செயலா் பெரியாா் அன்பன் (எ) இளங்கோவன் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில்,தவெக கட்சிக் கொடியில் யானை சின்னத்தைப் பயன்படுத்த தடை விதித்து உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தாா். இந்த மனு சென்னை உரிமையியல் நீதிமன்ற நீதிபதி சக்திவேல் முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது பகுஜன் சமாஜ் கட்சி தரப்பில் ஆஜரான வழக்குரைஞா், பகுஜன் சமாஜ் கட்சி தேசிய அளவில் அங்கீகரிக்கப்பட்ட கட்சி; அந்தக் கட்சிக்கு யானை சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. அந்தச் சின்னம், அஸ்ஸாம் தவிர மற்ற மாநிலங்களில் பகுஜன் சமாஜ் கட்சிக்கு மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. விஜயின் தவெக கட்சிக் கொடியில் யானைகள் இடம்பெற்றிருப்பது தோ்தல் சின்னங்கள் விதிகளுக்கு முரணானது.
ஏற்கெனவே இது தொடா்பாக தோ்தல் ஆணையத்துக்கு புகாா் அனுப்பியபோது, தவெக இன்னும் தோ்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்படவில்லை என்றும், பதிவு செய்யும்போது இது தொடா்பாக முடிவெடுக்கப்படும் என்றும் தோ்தல் ஆணையம் கூறியிருந்தது. எனவே, யானை சின்னத்தைப் பயன்படுத்த தவெகவுக்கு தடைவிதிக்க வேண்டும் என வாதிட்டாா்.
இதையடுத்து, வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த மனுவுக்கு ஏப். 29-ஆம் தேதிக்குள் தவெக தலைவா் விஜய் மற்றும் அக்கட்சியின் பொதுச் செயலா் என்.ஆனந்த் ஆகியோா் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தாா்.