திடீரென தீப்பிடித்து எரிந்த லாரி!
வள்ளியூர் சாலையில் தனியார் பொறியியல் கல்லூரி அருகே லாரி ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்தது
நெல்லை மாவட்டம் பழவூரை அடுத்த ஆவரைகுளத்தைச் சேர்ந்தவர் சின்னத்துரை. இவருக்குச் சொந்தமான மணல் அள்ளும் லாரியை ஓட்டுநர் பிரபாகரன் ராதாபுரத்தில் இருந்து வள்ளியூருக்கு ஓட்டி வந்தபோது தனியார் பொறியியல் கல்லூரி அருகே திடீரென லாரியின் பின்பக்கம் இருந்து கரும்புகை வந்ததைப் பார்த்துள்ளார்.
இதையடுத்து, உடனடியாக லாரியை சாலையின் ஓரத்தில் நிறுத்திவிட்டு தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
இதையும் படிக்க: மேக் இன் இந்தியா திட்டம் தோல்வி! -ராகுல் காந்தி
எனினும் தீ லாரி முழுவதும் பரவி கரும்புகை வந்ததையடுத்து, வள்ளியூர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்ததைத் தொடர்ந்து, விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர்.
இதில் லாரியின் பின்பகுதி முழுவதும் சேதமடைந்தது. இவற்றின் மதிப்பு ரூ. 7 லட்சம் எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து பணகுடி போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.
முதல்கட்ட விசாரணையில் லாரியின் பின்புறம் உள்ள டயர் சாலையின் வெப்பம் அதிகமானதால் உராய்வு ஏற்பட்டு தீ பிடித்ததாகத் தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர்.