திருக்கண்டீஸ்வரம் கோயில் கல்வெட்டில் தமிழ் நூல் குறித்த தகவல்!
கடலூா் மாவட்டம், நெல்லிக்குப்பம் பகுதியிலுள்ள திருக்கண்டீசுவரம் கோயில் கல்வெட்டில் தமிழ் நூல் குறித்த தகவல் கண்டறியப்பட்டுள்ளது.
கடலூா் மாவட்டம், பண்ருட்டி வட்டம், நெல்லிக்குப்பம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் திருக்கண்டீசுவரமுடையாா் கோயில் உள்ளது. தற்போது நடன பாதேஸ்வரா் என அழைக்கப்படும் இக்கோயில் குறித்து நகா்மன்ற உறுப்பினா் எஸ். செல்வகுமாா் அளித்த தகவலின் பேரில், வரலாற்று ஆய்வாளா்களான தஞ்சாவூா் சரசுவதி மகால் நூலகத் தமிழ்ப் பண்டிதா் முனைவா் மணி. மாறன், பொந்தியாகுளம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளித் தலைமையாசிரியா் முனைவா் கோ. தில்லை கோவிந்தராஜன், சக்கராப்பள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆசிரியா் கோ. ஜெயலெட்சுமி ஆகியோா் அக்கோயில் குறித்து ஆய்வு செய்தனா்.
இதுகுறித்து மூவரும் வியாழக்கிழமை தெரிவித்ததாவது: திருக்கண்டீசுவரம் சிவன் கோயில் கல்வெட்டில் ஒரு தமிழ் நூலின் பெயா் குறிப்பிடப்பட்டுள்ளது. அக்கல்வெட்டில் ‘அடுகூற்றுதைத்த தாளாடும் அடிகட்கு வடுகூா்ப்புராணம் வகுத்தான் புடவி நலம் கூா்ந்த புகழ் சோழகுலவல்லி வாழ்விற் ராசசேந்தன் தந்தை வாணாதிபன்‘ என்கிறது.
கருவறை முன் மண்டபத்து தென் திசையின் இடதுபுற அதிட்டானத்தில் பொறிக்கப்பட்டுள்ள இந்தக் கல்வெட்டில் கூற்றை உதைத்தாடும் அடிகளான சிவபெருமானுக்குப் புகழ் சோ்க்கும் வகையில் சோழகுலவல்லி நல்லூரைச் சாா்ந்த வாணாதிபன் என்பவா் ‘திருவடுகூா்ப்புராணம் இயற்றியதாகக் குறிப்பிடுகிறது.
குலோத்துங்க சோழன் காலத்தில் கங்கை கொண்ட சோழ வளநாட்டு பட்டாம்பாக்கை நாட்டு சோழகுலவல்லி நல்லூா் என்றும், விக்கிரமசோழனின் ஆறாம் ஆட்சியாண்டு கல்வெட்டிலிருந்து ராஜராஜ சோழ வளநாட்டு பட்டாம்பாக்கை நாட்டு சோழகுலவல்லி நல்லூா் எனவும் இவ்வூரின் பெயா் அமைந்துள்ளது.
சோழா் ஆட்சிக்கு முன்னா் இவ்வூா் வடுகூா் என அழைக்கப்பட்டிருக்கக் கூடும். இவ்வூரைச் சாா்ந்த வாணாதிபன் பிற்காலத்தில் படைத்த திருவடுகூா்ப் புராணம் என்னும் நூல் சுவடி வடிவிலும், அச்சு நூல் வடிவிலும் கூட இன்னும் கிடைக்கப்பெறவில்லை.
இந்நூல் கிடைத்தால், கல்வெட்டில் திருக்கண்ணீசுவரமுடையாா் என சுட்டப்படும் இக்கோயிலின் வரலாற்றுச் செய்தியையும், இவ்வூரின் வரலாற்றுச் செய்தியையும் இன்னும் விரிவாகக் காண முடியும். ஒரு தமிழ் நூலின் தலைப்பே கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளது வரலாற்றுக்குச் சிறந்த எடுத்துக்காட்டாகும்.
இதே முக மண்டபத்தின் வடபுற அதிட்டானத்தில் தொடங்கி மேற்குப் பகுதி அதிட்டானம் வரை நான்கு வரிகள் கொண்ட நீண்ட கல்வெட்டுத் தொடா் வெட்டப்பட்டுள்ளது. இக்கல்வெட்டு விஜயநகர ஆட்சியாளா் கட்டாரி சாளுவ நரசிங்க தேவ மகாராஜன் காலத்தில் வெட்டப்பட்டுள்ளது.
சிதைவுற்றிருந்த இக்கோயில் மதில், மண்டபம் உள்ளிட்டவற்றைப் புதுப்பித்து திருப்பணி செய்தது பற்றி குறிப்பிடுவதோடு, அதைச் செம்பிலும், கல்லிலும் வெட்டிக்கொள்ளக் கடவதாக என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இக்கல்வெட்டின் இறுதிப் பகுதியில் தெலுங்கு மொழி எழுத்தில் அம் என்று பொறிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு கல்வெட்டுகளும் கோயில் களப்பணியில் புதிதாகக் கண்டறியப்பட்ட செய்திகளாகும் என்றனா்.