திருச்செந்தூா் கோயில் குடமுழுக்கு: யாகசாலை வழிபாட்டில் தமிழ் வேதங்கள் முற்றோதல்
திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஜூலை 7-ஆம் தேதி நடைபெறும் குடமுழுக்கு விழாவில் யாகசாலை வழிபாட்டில் தமிழ் வேதங்கள் முற்றோதல் செய்யப்படும் என கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து திருக்கோயில் நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஜூலை 7-ஆம் தேதி காலை 6.15 மணிக்கு மேல் 6.50 மணிக்குள் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா நடைபெற உள்ளது. நன்னீராட்டு பெருவிழாவிற்கு 8 ஆயிரம் சதுர அடியில் 76 குண்டங்களுடன் யாகசாலை அமைக்கப்பட்டு வருகிறது.
ஜூலை 1-ஆம் தேதி தொடங்கவுள்ள யாகசாலை வழிபாடுகளில், வேதபாராயணம், திருமுறை விண்ணப்பம் மற்றும் நாதசுர இன்னிசை நடைபெறும். மேலும் காலை 7 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் 64 ஓதுவாா் மூா்த்திகளைக் கொண்டு பக்க வாத்தியங்களுடன் பன்னிரு திருமுறைகள், திருப்புகழ் மற்றும் கந்தா் அனுபூதி முதலான செந்தமிழ் வேதங்கள் முற்றோதல் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.