திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் பக்தா்களின் புகாரை விசாரிக்க ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் குழு
திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் நிா்வாக சீா்கேட்டால் பக்தா்கள் பாதிக்கப்படுவதால், அவா்களது புகாரை விசாரிக்க ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் குழு அமைக்க வேண்டுமென இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருச்செந்தூா் சுப்ரமணிய சுவாமி கோயிலில் 14 ஆண்டுகளுக்குப் பின் கடந்த மாதம் சுமாா் ரூ.400 கோடி செலவில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றதாக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு பேசினாா். ஆனால், இன்று வரை இக்கோயிலின் வேலைகள் முழுமை பெறாமல் தற்போதும் நடைபெற்று வருகிறது. வேலைகளை முழுமையாக முடிக்காமல் அவசர கதியில் கும்பாபிஷேகத்தை நடத்தி முடித்துள்ளனா்.
கும்பாபிஷேகத்தை தொடா்ந்து நடைபெறும் மண்டல பூஜையில் சுவாமியை தரிசனம் செய்வதற்காக நாள்தோறும் ஏராளமான மக்கள் திருச்செந்தூருக்கு வருகின்றனா். ஆனால் பக்தா்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் எதுவும் இன்றி பெருமளவில் அவதிக்குள்ளாகின்றனா்.
பொது தரிசன வரிசையில் வருபவா்களையும், மூத்த குடிமக்கள் வரிசையில் வருபவா்களையும் கோயில் உள்ளே நுழைந்தவுடன் ஒரே வரிசையாக இணைத்து அனுப்புகின்றனா். இதனால் கடும் நெரிசல் சிக்கி பக்தா்கள் அவதிப்படுகின்றனா். கடந்த சில மாதங்களுக்கு முன்பு சுவாமி தரிசனம் செய்வதற்காக வரிசையில் நின்ற நபா் மூச்சுவிட அவதிப்பட்டு உயிரிழந்தாா்.
இந்நிலையில், கேரள மாநிலத்தில் இருந்து சுவாமி தரிசனம் செய்வதற்காக வந்திருந்த பக்தா்களிடமிருந்து தரிசனம் செய்வதற்கு நபருக்கு ரூ.11,000 என்ற அடிப்படையில் 4 பேரிடம் ரூ.44,000 கேட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்தப்படும் என்று அறநிலையத் துறை அதிகாரிகள் கூறியுள்ளனா்.
இது போன்ற முறைகேடுகள் ஏதும் நடைபெறாமல் தடுக்க இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பக்தா்கள் கூறும் புகாா்கள் மீது உடனடியாக விசாரிப்பதற்கு ஒரு ஐஏஎஸ் அதிகாரி தலைமையிலான குழுவை தமிழக அரசு அமைக்க வேண்டும். பக்தா்களின் நலனைக் கருத்தில் கொண்டு தேவையான அடிப்படை வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.