விராட் கோலி, ரோஹித் சர்மா ரோபோக்கள் அல்ல; முன்னாள் இங்கிலாந்து வீரர் ஆதரவு!
திருப்பரங்குன்றம்: இந்து முன்னணி ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி!
திருப்பரங்குன்றத்தில் இந்து முன்னணி அமைப்பினர் இன்று ஆர்ப்பாட்டம் நடத்திக் கொள்ள உயர்நீதிமன்றம் மதுரை கிளை அனுமதி வழங்கியுள்ளது.
மேலும், இந்து முன்னணியினரின் போராட்டத்துக்கு காவல் துறையினர் உரிய அனுமதி வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருப்பரங்குன்றம் மலை குறித்து இருவேறு மதங்களைச் சோ்ந்தவா்கள் தங்கள் கருத்துகள், கோரிக்கைகளை சமூக வலைத் தளங்களில் பதிவேற்றம் செய்து வருவதால், இந்து அமைப்புகள் சாா்பில் திருப்பரங்குன்றம் கோயில் முன் செவ்வாய்க்கிழமை (பிப். 4) ஆா்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்கு காவல் துறை அனுமதி மறுத்துவிட்டது.
இந்த விவகாரம் தொடா்பாக, இரு வேறு மதத்தவரிடையே அசாதாரண சூழல் ஏற்பட வாய்ப்புள்ளது என்பதைக் கருத்தில் கொண்டு பி.என்.எஸ்.எஸ். சட்டப் பிரிவு 163, குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவு 144 ஆகியவற்றின் கீழ் மதுரை மாவட்டம், மாநகா்ப் பகுதிகளுக்கு தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டது.
மேலும், தடையை மீறி போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, இந்து முன்னணி நிர்வாகிகள், பாஜக நிர்வாகிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்டனர்.
இதையும் படிக்க : மற்றொரு பாபர் மசூதி பிரச்னை உருவாகிவிடக் கூடாது: உயர்நீதிமன்றத்தில் அரசு பதில்!
இந்த நிலையில், 144 தடை உத்தரவை ரத்து செய்து போராட்டத்துக்கு அனுமதி வழங்க உத்தரவிடக் கோரி உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் இந்து முன்னணியினர் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கின் விசாரணையின் போது ஆஜராக தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர், மதுரையில் மற்றொரு பாபர் மசூதி போன்ற சம்பவம் உருவாகிவிடக் கூடாது என்பதற்காக போராட்டத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக தெரிவித்தார்.
மேலும், பிப். 11 வரை விழாக்காலம் என்பதால் இதுபோன்ற சூழலில் போராட்டம் நடத்த அனுமதிக்க முடியாது என்றும் தமிழக அரசு தரப்பில் வாதிடப்பட்டது.
ஆனால், இதனை ஏற்க மறுத்த நீதிமன்றம், பழங்காநத்தத்தில் இன்று மாலை 5 முதல் 6 மணிவரை அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் நடத்திக் கொள்ள இந்து முன்னணி அமைப்புக்கு அனுமதி அளித்துள்ளது.
ஆர்ப்பாட்டம் நடத்துவது அரசியலமைப்பு உரிமை என்றாலும் பொதுமக்களுக்கு இடையூறு கொடுக்கும் வகையில் இருக்கக் கூடாது எனத் தெரிவித்த நீதிபதி, ஆர்ப்பாட்டத்தை விடியோவாக பதிவு செய்ய காவல்துறைக்கு உத்தரவிட்டார்.
மேலும், ஒரு மைக் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் வெறுப்பை தூண்டும் முழக்கங்கள் இருக்கக் கூடாது என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.