இந்தியா - பாகிஸ்தான் நேரடி பேச்சுவார்த்தைக்கு அமெரிக்கா ஆதரவு!
தில்லியில் ஒரே நாளில் 90 விமானங்கள் ரத்து!
தில்லி விமான நிலையத்தில் ஒரே நாளில் சுமார் 90 விமானங்களின் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது.
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, பாகிஸ்தான் மீது இந்தியா நடத்திய ‘ஆபரேஷன் சிந்தூர்’ மூலம் அந்நாட்டிலுள்ள பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன.
இதனால், இந்தியா - பாகிஸ்தான் இடையில் போர்ப் பதற்றம் அதிகரித்து காணப்படும் நிலையில் இருநாடுகளும் தங்களது வான்வழித் தடங்களை மூடியதுடன், விமானங்களின் போக்குவரத்தை மிகப் பெரியளவில் குறைத்துள்ளன.
இந்நிலையில், இந்தியாவின் பல்வேறு நகரங்களிலுள்ள 27 விமான நிலையங்கள் மூடப்பட்டதுடன், நூற்றுக்கணக்கான விமானங்களின் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளன.
அதில், தலைநகர் தில்லியின் விமான நிலையத்தில் 11 வெளிநாட்டு விமானங்களின் போக்குவரத்து உள்பட மொத்தம் 90 விமானங்களின் பயணமானது ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தில்லியிலிருந்து பிற நகரங்களுக்கு இயக்கப்பட்ட உள்நாட்டு விமானங்களின் சேவை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இன்று (மே 8) காலை 8 மணி முதல் மதியம் 2 மணிவரையில், அங்கிருந்த புறப்பட வேண்டிய 46 விமானங்கள் மற்றும் வரவிருந்த 33 விமானங்களின் போக்குவரத்து ரத்தாகியுள்ளன.
இருப்பினும், தில்லி விமான நிலையத்தின் 4 விமான ஓடுபாதை வழக்கம் போல் செயல்பட்டதாகவும், வான்வழித் தடங்களின் மாற்றத்தினால் சில விமானங்களின் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தில்லி விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிக்க:அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்கவில்லை! இது 2-வது முறை!!