சூரியனின் ஒளிவெடிப்பை காட்சிப்படுத்திய ஆதித்யா விண்கலம்: இஸ்ரோ
துபையில் மட்டுமே விளையாடும் இந்திய அணி; நியூசிலாந்து வீரர் கூறுவதென்ன?
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியாவுக்கு எதிராக துபையில் விளையாடவுள்ள போட்டி குறித்து நியூசிலாந்து வீரர் மைக்கேல் பிரேஸ்வெல் பேசியுள்ளார்.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. குரூப் ஏ பிரிவிலிருந்து இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுவிட்ட நிலையில், குரூப் பி பிரிவிலிருந்து அரையிறுதிக்குத் தகுதி பெறுவதற்கான போட்டி அணிகளுக்குள் கடுமையாக உள்ளது.
இந்திய அணிக்கு சாதகமான சூழலா?
குரூப் சுற்றின் கடைசிப் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதிக்கொள்ள உள்ள நிலையில், வித்தியாசமான சூழலில் விளையாடவுள்ளதை நினைத்து உற்சாகமாக இருப்பதாக நியூசிலாந்து சுழற்பந்துவீச்சாளர் மைக்கேல் பிரேஸ்வெல் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: கூகுளில் அதிகம் தேடப்பட்ட வீரர்; பஞ்சாப் கிங்ஸுக்கு நன்றி தெரிவித்த ஷஷாங் சிங்!
இது தொடர்பாக அவர் பேசியதாவது: இந்திய அணி துபையில் அனைத்துப் போட்டிகளையும் விளையாடப் போகிறது என்பது முடிவு செய்யப்பட்டுவிட்டது. அதனால், அது குறித்து தொடர்ந்து பேசுவதால் எந்த ஒரு பயனும் இல்லை. இந்திய அணிக்கு எதிராக துபையில் விளையாடவுள்ளது உற்சாகமாக இருக்கிறது. வித்தியாசமான சூழல், புதிய ஆடுகளத்தில் விளையாடவுள்ளோம். புதிய விஷயங்களை கற்றுக்கொள்ள உள்ளோம்.
துபையில் உள்ள ஆடுகளங்கள் சுழற்பந்துவீச்சுக்கு உதவுவதாக உள்ளது. அதனால், இந்த ஆடுகளங்களுக்கு ஏற்றவாறு எங்களை சீக்கிரமாக மாற்றிக் கொள்ள வேண்டும். பாகிஸ்தானில் உள்ள ஆடுகளங்கள் விளையாடுவதற்கு நன்றாக இருந்தது. எந்த ஆடுகளங்களிலும் விளையாடும் அளவிலான சமபலத்துடன் கூடிய அணியாக நாங்கள் உள்ளோம். அதனால் எந்த ஆடுகளங்களிலும் எங்களால் சிறப்பாக விளையாட முடியும் என்ற நம்பிக்கை உள்ளது.
இதையும் படிக்க: இந்திய அணியில் ஷுப்மன் கில்லுக்கு மிகப் பெரிய எதிர்காலம் உள்ளது: ஷிகர் தவான்
எங்களை அதிகப்படியான அழுத்தத்துக்கு ஆளாக்கிக்கொள்ள விரும்பவில்லை. இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை முழுமையாக வென்றது எங்களது நம்பிக்கையை அதிகரித்துள்ளது. அதுமட்டுமின்றி, ஐசிசி தொடர்களில் இந்தியாவுக்கு எதிரான போட்டிகளில் நாங்கள் சிறப்பாக செயல்பட்டுள்ளோம். அரையிறுதிக்கு தகுதி பெற்றுவிட்ட போதிலும், இந்தியாவுக்கு எதிரான போட்டி எங்களுக்கு மிகவும் முக்கியமான போட்டி என்றார்.