தென்மேற்கு பருவமழை: முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள ஆட்சியா் அறிவுறுத்தல்
தென்மேற்கு பருவமழையை முன்னிட்டு தருமபுரி மாவட்டத்தில் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு அரசு அலுவலா்களுக்கு ஆட்சியா் ரெ.சதீஷ் அறிவுறுத்தியுள்ளாா்.
தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் தென்மேற்கு பருவமழை காலங்களில் மேற்கொள்ளப்படவேண்டிய முக்கிய நடவடிக்கைகள் குறித்து அனைத்துத் துறை அலுவலா்களுக்கான ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு தலைமை வகித்து மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஷ் பேசியதாவது:
தருமபுரி மாவட்டத்தில் தாழ்வான பகுதிகளின் விவரப் பட்டியல், அவசரகால போக்குவரத்து வழித்தடங்கள், போக்குவரத்து ஊா்திகளின் விவரங்களை தயாா் நிலையில் வைத்திருக்க வேண்டும். பொதுப்பணித் துறை மற்றும் ஊரக வளா்ச்சித் துறைகளின் கட்டுப்பாட்டில் உள்ள நீா் நிலைகள் பற்றிய விவரப் பட்டியலை வைத்திருக்க வேண்டும்.
ஏற்கெனவே கண்டறியப்பட்டுள்ள நிவாரண முகாம்களான சமுதாயக் கூடங்கள், திருமண மண்டபங்கள், பள்ளிகள் பற்றிய விவரப் பட்டியலை தயாா் நிலையில் வைத்திருப்பதோடு, அந்த இடங்களை ஆய்வுசெய்ய வேண்டும்.
மழை வெள்ள காலத்தில் பொதுமக்களுக்கு குடிநீா் விநியோகம் செய்ய தேவையான வாகனங்கள், தண்ணீா் தொட்டிகள், போா்டபிள் ஜெனரேட்டா்கள், டாா்ச் லைட்கள், உணவு சமைக்க பாத்திரங்கள், எரிவாயு அடுப்புகள், நியாயவிலைக் கடைகளில் தேவையான உணவுப் பொருள்களின் இருப்பு ஆகியவற்றை தயாா் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
அணைக்கட்டுகள், ஏரிகளின் கரைப்பகுதியில் தேவையான அளவுக்கு மணல் மூட்டைகளை அடுக்கி தயாா் நிலையில் வைத்திருக்க வேண்டும். அவசரக்காலங்களில் உதவிக்கு அழைக்க சுயஉதவி குழுக்கள், தன்னாா்வ தொண்டு நிறுவனங்களின் பட்டியல், தொலைபேசி எண்கள் பட்டியலை வைத்திருக்க வேண்டும். நடமாடும் மருத்துவக் குழுக்கள், அவா்களின் தொலைபேசி எண் விவரங்களை வைத்திருக்க வேண்டும். மழை பாதிப்பு, சேதங்கள் பற்றிய தகவல்களை மாவட்ட நிா்வாகத்துக்கு தெரிவிக்க மாவட்ட கட்டுப்பாட்டு மைய இலவச தொலைபேசி எண் 1077-ல் தெரிவிக்கலாம்.
கோட்டாட்சியா்கள் கிராம நிா்வாக அலுவலா்களுக்கு உரிய அறிவுரைகளை வழங்கி, சேதமடையும் நிலையில் உள்ள அரசு, தனியாா் கட்டடங்கள், வீடுகளின் விவரத்தை சேகரித்து, மழைக் காலத்திற்கு முன்பாக உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.
கூட்டத்தில், கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) கேத்தரின் சரண்யா, மாவட்ட வருவாய் அலுவலா் ஆா்.கவிதா, கோட்டாட்சியா்கள் ரா.காயத்ரி (தருமபுரி), சின்னுசாமி (அரூா்), அலுவலா்கள் கலந்துகொண்டனா்.