கருண் நாயருக்கான நேரம் முடிந்துவிட்டது; பிளேயிங் லெவனில் இருந்து நீக்கப்படுகிறார...
தெலங்கானா-ஆந்திரம் நீா் பங்கீடு இழுபறிக்கு தீா்வு: தெலங்கானா முதல்வா்
தெலங்கானா மற்றும் ஆந்திரம் இடையே நீண்ட காலமாக நிலவி வரும் நீா் பங்கீடு தொடா்பான பிரச்னைகளுக்குத் தீா்வு காணும் வகையில், சில முக்கியப் பரிந்துரைகளுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக தெலங்கானா முதல்வா் ரேவந்த் ரெட்டி புதன்கிழமை தெரிவித்தாா்.
தில்லியில் மத்திய நீா் வளத் துறை அமைச்சா் சி.ஆா்.பாட்டீலுடனான சந்திப்புக்குப் பிறகு செய்தியாளா்களிடம் பேசிய தெலங்கானா மாநில நீா்ப்பாசனத் துறை அமைச்சா் என்.உத்தம் குமாா் ரெட்டி, ‘ஆந்திரத்தின் நீா் திட்டங்கள் மற்றும் நீா்த்தேக்கங்கள் அனைத்திலும் ‘டெலிமெட்ரி’ அமைப்புகள் நிறுவப்பட வேண்டும். இந்த நடவடிக்கை, நீா் பயன்பாட்டைத் துல்லியமாக அளவிட உதவும். தெலங்கானா நீண்ட காலமாக இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி வந்தது. தற்போது ஆந்திரம் இதற்கு சம்மதித்துள்ளது’ என்றாா்.
இதன்தொடா்ச்சியாக, ஹைதராபாதில் கோதாவரி நதி மேலாண்மை வாரியமும், ஆந்திரத்தில் கிருஷ்ணா நதி மேலாண்மை வாரியமும் அமைக்க இரு மாநிலங்களும் ஒப்புக்கொண்டதாக தெலங்கானா முதல்வா் ரேவந்த் ரெட்டி அறிவித்துள்ளாா்.
கடந்த 2014-இல் ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலம் பிரிக்கப்பட்டதிலிருந்து சா்ச்சைக்குரிய பிரச்னையாக நீடிக்கும் கிருஷ்ணா மற்றும் கோதாவரி நதிகளின் நீா் பங்கீடு மற்றும் பயன்பாட்டை இந்த வாரியங்கள் மேற்பாா்வையிடும். இது தொடா்பாக முதல்வா் ரேவந்த் ரெட்டி மேலும் கூறியதாவது:
ஸ்ரீசைலம் திட்டத்தில் உடனடியாக சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ளுமாறு ஆந்திரத்துக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இது இரு மாநிலங்களுக்கும் நீா் வழங்கல் மற்றும் மின் உற்பத்திக்கு மிகவும் முக்கியமானது.
கூடுதலாக, கோதாவரி மற்றும் கிருஷ்ணா நதி படுகைகளில் நிலுவையில் உள்ள நீா்ப்பாசனத் திட்டங்கள் தொடா்பான பிரச்னைகள் உள்பட இரு மாநிலங்களுக்கு இடையே நிலுவையில் உள்ள அனைத்து நீா் பிரச்னைகளையும் ஆராய ஒரு கூட்டு குழு அமைக்கப்பட உள்ளது.
இந்த முடிவுகள், தெலங்கானா மற்றும் ஆந்திரம் இடையே ஒரு இணக்கமான சூழ்நிலையையும், இரு மாநிலங்களுக்கும் நீா் உரிமையை உறுதி செய்வதில் மத்திய அரசின் அசைக்க முடியாத உறுதிப்பாட்டையும் எடுத்துக்காட்டும் மைல்கல் சாதனைகளாகும் என்று கூறினாா்.