ஊதினால் அணைய நாம் என்ன தீக்குச்சியா? உதயசூரியன்: முதல்வர் ஸ்டாலின்
தெலங்கானா: வண்டியில் GPS; காதலன், தாய் செய்த உதவி; கணவனைக் கொன்ற மனைவி கைது; விசாரணையில் பகீர் தகவல்
தெலங்கானா மாநிலம் ஐதராபாத் அருகில் உள்ள கட்வால் என்ற இடத்தைச் சேர்ந்த தேஜஸ்வருக்குக் கடந்த மே 18ம் தேதிதான் ஐஸ்வர்யா என்பவருடன் திருமணம் நடந்தது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு தேஜஸ்வர் திடீரென காணாமல் போய்விட்டார். அவர் காணாமல் போனது குறித்து எந்தவித கவலையும் இல்லாமல் ஐஸ்வர்யா தனது கணவன் வீட்டில் இருந்தார்.
தேஜஸ்வர் பெற்றோர் தங்களது மகனைக் காணவில்லை என்று கூறி, போலீஸில் புகார் செய்தனர். அதோடு தேஜஸ்வர் மனைவி ஐஸ்வர்யாவின் நடவடிக்கையில் தங்களுக்குச் சந்தேகம் இருப்பதாகத் தெரிவித்திருந்தனர்.
அதன் அடிப்படையில் போலீஸார் தேஜஸ்வரைத் தேடி வந்தனர். அருகில் உள்ள கர்னூல் என்ற இடத்தில் ஒருவரது உடல் கால்வாயில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கட்வால் போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது.

உடனே போலீஸார் அங்கு விரைந்து சென்றனர். அங்குக் கிடந்தவர் உடல் அழுகிய நிலையில் இருந்தது. இறந்து கிடந்தவர் கையில் அம்மா என்று டாட்டூ வரையப்பட்டு இருந்தது. அதன் மூலம் அவர் காணாமல் போன தேஜஸ்வர் என்று அடையாளம் காணப்பட்டது.
அவரது உடலைப் பிரேதப் பரிசோதனை செய்ததில் அவர் கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டு இருந்தார். தேஜஸ்வர் நில சர்வேயராகப் பணியாற்றி வந்தார். போலீஸார் கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது தேஜஸ்வர் கார் ஒன்றில் ஏறிச்செல்வது தெரிய வந்தது.
இதையடுத்து போலீஸார் ஐஸ்வர்யாவைப் பிடித்து தீவிர விசாரணை நடத்தியபோது காதலனுடன் சேர்ந்து கணவனைக் கொலை செய்ததை ஒப்புகொண்டார்.
இது குறித்து போலீஸ் அதிகாரி கூறுகையில், ''இக்கொலை தொடர்பாக தேஜஸ்வர் மனைவி ஐஸ்வர்யா, அவரது காதலன் திருமால் ராவ், ஐஸ்வர்யாவின் தாயார் சுஜாதா உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஐஸ்வர்யா முதலில் ஒரு ஜி.பி.எஸ் வாங்கி தனது கணவனின் இரு சக்கர வாகனத்தில் பொருத்தி அவர் எங்குச் செல்கிறார் என்று கண்காணித்து வந்துள்ளார்.
திருமால் நியமித்த கூலிப்படையைச் சேர்ந்த மூன்று பேர் தேஜஸ்வரிடம் நிலம் ஒன்றை அளக்க வேண்டும் என்று கூறி காரில் அழைத்து சென்றுள்ளனர். காரின் முன் இருக்கையில் தேஜஸ்வர் இருந்துள்ளார்.
பின்னால் இருந்தவர்கள் கார் சென்று கொண்டிருக்கும்போதே தேஜஸ்வரின் தலையில் ஓங்கி அடித்துள்ளனர். பின்னர் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளனர். அதனைத் தொடர்ந்து அனைவரது சட்டையும் ரத்தமானதால் வேறு அடைகளை வாங்கி அணிந்து கொண்டு உடலைத் தாங்கள் அளக்க வேண்டிய நிலத்தில் புதைத்துவிட திட்டமிட்டனர்.
ஆனால் அந்த இடத்தில் சிலர் நின்று கொண்டிருந்ததால் வேறு வழியில்லாமல் உடலை அங்குள்ள கால்வாயில் போட்டுவிட்டு சென்றுள்ளனர். ஆனால் கால்வாயில் போதிய அளவு தண்ணீர் இல்லை. இதனால் உடல் தண்ணீரில் அடித்து செல்லப்படவில்லை'' என்று தெரிவித்தனர்.

கட்வால் போலீஸ் அதிகாரி ஸ்ரீனிவாஸ் ராவ் கூறுகையில், ''ஐஸ்வர்யா மற்றும் அவரது காதலன் திருமால் ராவ்விடம் விசாரித்த போது தேஜஸ்வரை மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த ராஜா ரகுவன்சியைக் கொலை செய்தது போன்று கொலை செய்யத்தான் முதலில் திட்டமிட்டு இருந்தனர்.
ஆனால் அத்திட்டத்தைக் கைவிட்டுவிட்டு வேறு திட்டத்தைக் கையில் எடுத்ததாக இருவரும் தெரிவித்தனர். தேஜஸ்வர் இருசக்கர வாகனத்தில் ஜி.பி.எஸ். பொருத்தியதோடு, மோகன் என்பவரிடம் சொல்லி தேஜஸ்வர் எங்கெல்லாம் செல்கிறார் என்று கண்காணிக்கும்படி கேட்டுள்ளனர்.
ஐஸ்வர்யாவும், திருமால் ராவும் சேர்ந்து மே 18ம் தேதியில் இருந்து தேஜஸ்வரை கொலை செய்ய 5 முறை முயற்சி செய்தனர். 6வது முயற்சியில் கொலை செய்துள்ளனர்.
முக்கோண காதல்
ஐஸ்வர்யாவின் தாயார் சுஜாதா நிதி நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தார். அங்குப் பணியாற்றிய திருமால் ராவ்வுடன் சுஜாதாவிற்கு தொடர்பு ஏற்பட்டது. திடீரென சுஜாதா விடுமுறை எடுத்தார்.
அந்த இடத்தில் ஐஸ்வர்யா வேலைக்குச் சென்றார். ஐஸ்வர்யாவுடனும் திருமாலுக்குத் தொடர்பு ஏற்பட்டது. இது குறித்து சுஜாதாவிற்குத் தெரிய வந்தது. உடனே தான் பார்த்து வைத்திருந்த தேஜஸ்வரைத் திருமணம் செய்யும்படி சுஜாதா தனது மகளுக்கு நிர்ப்பந்தம் கொடுத்து வந்தார். ஆனால் அதற்கு ஐஸ்வர்யா சம்மதிக்காமல் இருந்தார்.
அவரைப் பேசி சம்மதிக்க வைத்தார். இறுதியில் திருமண தேதி முடிவானபோது ஐஸ்வர்யா திடீரென காணாமல் போய்விட்டார். காணாமல் போன ஐஸ்வர்யா பின்னர் திரும்ப வந்து தேஜஸ்வரைத் திருமணம் செய்து கொண்டார்.

திருமால் வேலை செய்த நிதி நிறுவனத்திற்கு 3 பேர் கடன் கேட்டு வந்துள்ளனர். அவர்களிடம் தேஜஸ்வரைக் கொலை செய்தால் கடன் கொடுப்பதோடு கொலைக்கான பணமும் கிடைக்கும் என்று திருமால் தெரிவித்துள்ளார். தேஜஸ்வரைக் கொலை செய்துவிட்டு ஐஸ்வர்யாவும், திருமாலும் லடாக், அந்தமான் தப்பிச்செல்ல டிக்கெட் எடுத்து வைத்திருந்தனர். இதற்காக திருமால் 20 லட்சம் கடனும் வாங்கி இருந்தார்'' என்று தெரிவித்தார்.
தேஜஸ்வர் குடும்பத்தினர் இது குறித்து கூறுகையில், ''ஐஸ்வர்யா எப்போதும் போன் பேசிக்கொண்டே இருப்பார். திருமணத்தன்று கூட போனிலும், வீடியோ காலிலும் பிஸியாக இருந்தார். பிப்ரவரி மாதத்தில் இருந்து ஜூன் மாதம் வரை ஐஸ்வர்யாவும், திருமாலும் 2000 முறை போனில் பேசியுள்ளனர்" என்று தெரிவித்தனர்.
ஐஸ்வர்யா தனது கணவனைத் தனது தாயாருக்குத் தெரிந்தே கொலை செய்துள்ளார்.