கரூரில் அமைச்சா் செந்தில் பாலாஜியின் ஆதரவாளா்கள் 3 பேரின் வீடுகளில் அமலாக்கத்துற...
தேனி: மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரங்களில் கூட்டமாக வலம் வரும் காட்டு மாடுகள் - அச்சத்தில் விவசாயிகள்!
கோடைகாலம் தொடங்கிய நிலையில் மேற்கு தொடர்ச்சி மலையில் மரங்கள் கொளுத்தும் வெயிலுக்கு கருகிவருகின்றன. மேலும் காட்டுத்தீ ஏற்பட்டு வனப்பகுதியில் தீ பரவத் தொடங்கியிருக்கிறது. இதனால் வெப்பம் காரமணாகவும், தண்ணீர் தட்டுப்பாடு காரணமாகவும் வனவிலங்குகள் மலை அடிவாரப் பகுதிகளுக்குத் தண்ணீர் தேடி வரத் தொடங்கியுள்ளன.

தேனி அல்லிநகரம் கிராமத்தில் நான்காயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகளுக்கு அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள வீரப்ப அய்யனார் கோவிலைச் சுற்றி உள்ள சுமார் 5 ஆயிரத்திற்கு மேற்பட்ட ஏக்கரில் தோட்டங்கள் உள்ளன. இப்பகுதியில் அதிகப்படியாக மா விவசாயமும் இரண்டாவதாக தென்னை விவசாயம் நடைபெற்று வருகிறது.
இப்பகுதியில் உள்ள மேற்கு தொடர்ச்சி வனப்பகுதியில் காட்டு மாடு, சிறுத்தை, செந்நாய் உள்ளிட்ட ஏராளமான வன விலங்குகள் உள்ளன. மலைக்கு மிக அருகாமையில் அமைந்துள்ள பகுதி என்றாலும்கூட இங்குள்ள தோட்டப் பகுதியில் வனவிலங்குகள் நடமாட்டம் சற்று குறைவு தான். அத்தி பூத்தது போல என்றாவது ஒரு நாள் ஒரு காட்டு மாடு பார்ப்பதே மிகவும் அரிதான ஒன்று. ஆனால் சமீப காலமாக இங்கு 50க்கும் மேற்பட்ட காட்டு மாடுகள் கூட்டம் கூட்டமாக சர்வசாதாரணமாக தோட்டப் பகுதியில் உலா வருவதும், தோட்டத்திற்குச் செல்லும் பிரதான சாலைகளைக் கடந்து செல்வது வாடிக்கையாக உள்ளது. இதன் காரணமாக அப்பகுதி விவசாயிகள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர்.

இது குறித்து நம்மிடம் பேசிய அப்பகுதி விவசாயிகள், ``கடந்து மூன்று மாதங்களாக இந்த காட்டு மாடு கூட்டம் அதிகாலை 6 மணி அளவில் வனப்பகுதியில் இருந்து தோட்டப்பகுதிக்குள் வருகின்றது. பகல் நேரம் முழுவதும் ஒவ்வொரு தோட்டமாக அப்பகுதி முழுவதுமாக சுற்றி வந்து பின்னர் இரவு நேரத்தில் மீண்டும் வனப்பகுதிக்கு சென்றுவிடுகிறது. தோட்டப்பகுதியில் வரும் மாடுகள் அங்குள்ள மாரங்களை சேதப்படுத்தி வருகிறது.
தற்போது மா மரத்தில் மாம்பூக்கள் பூக்கும் காலம் என்பதால் இந்த மாடுகளால் ஏற்படும் சேதம் காரணமாக கோடை காலத்தில் மா விளைச்சல் பாதிப்படையக்கூடிய நிலை உள்ளது. தங்களது மா மரங்களை பாதுகாப்பதற்காக தோட்டப்பகுதியில் மாடுகள் நுழையாதவாறு விளைநிலங்களை சுற்றி கம்பி வேலிகளையும் விவசாயிகள் அமைத்துள்ளனர். இருப்பினும் காட்டுமாடுகள் தேட்டத்தில் புகுந்து விடுகின்றன. அதற்கு வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர்

வனத்துறையினரிடம் விசாரித்தபோது, ``வனப்பகுதியில் ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக இவ்வாறு வனப்பகுதியை விட்டு தோட்டப்பகுதியில் நுழைகின்றது. வனத்துறை சார்பாக காட்டு மாடு கூட்டத்தை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். மாடுகள் நடமாட்டம் இருக்கும் பகுதிக்கு நேரடியாக சென்று வனப்பகுதியில் விரட்டும் பணியில் தினந்தோறும் ஈடுபட்டு வருகிறோம்" என்றனர்.