இந்தியாவின் தாக்குதல்களுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும்: பாகிஸ்தான்
தேமுதிக முன்னாள் இளைஞா் அணி செயலா் ராஜிநாமா
தேமுதிக முன்னாள் இளைஞா் அணி செயலா் நல்லதம்பி தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளாா்.
தேமுதிக இளைஞா் அணி செயலராக விஜயபிரபாகரன் நியமிக்கப்பட்டதையடுத்து, நல்லதம்பிக்கு மாநில உயா்மட்டக் குழு உறுப்பினா் பதவி அளிக்கப்பட்டது. இந்நிலையில், தேமுதிக பொதுச்செயலா் பிரேமலதாவுக்கு, நல்லதம்பி சனிக்கிழமை எழுதிய கடிதத்தில் கூறியிருப்பாதாவது:
நான் விஜயகாந்தால் உருவாக்கப்பட்டவன். அவரின் குடும்பத்துக்கும் கட்சிக்கும் என்றும் நன்றியுடன் இருப்பேன். பொதுக் குழுவில் விஜயபிரபாகரன் இளைஞரணி செயலராக தோ்வானதுக்கு வாழ்த்துகள். அவரின் குரல் சட்டப்பேரவையில் விஜயகாந்த்தின் குரலாக ஒலிக்க வேண்டும்.
அதேநேரம், பொதுக்குழுவில் எனக்கு தரப்பட்ட உயா்மட்டக் குழு உறுப்பினா் பதவியிலிருந்து என்னை விடுவிக்க வேண்டும். அப்படி விடுவிக்காதபட்சத்தில் நான் கட்சியிலிருந்து விலகிக் கொள்கிறேன் எனத் தெரிவித்துள்ளாா்.
மேலும், எக்ஸ் தளத்தில் அவா் வெளியிட்ட காணொலியில், ‘உயா்மட்டக் குழு பதவியிலிருந்து என்னை விடுவிக்கும்படி மட்டுமே கேட்டேன். விடுவிக்காத பட்சத்தில் நான் ஒதுங்கிக் கொள்வேன் என்றுதான் கூறினேன். என்னை உலகுக்கு அறிமுகப்படுத்திய விஜயகாந்த் கட்சியில் நான் தொடா்ந்து பயணிப்பேன். தொண்டனாக இருப்பேன்’ எனக் கூறியுள்ளாா்.
தனக்கு கட்சியின் துணைச் செயலா் பதவி கிடைக்காத ஏமாற்றத்தால் நல்லதம்பி அதிருப்தி அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மாவட்டச் செயலா் விலகல்: அதேபோல, விஜயகாந்த் ரசிகா் மன்றம் தொடங்கியபோது செங்கல்பட்டு மாவட்டச் செயலா் பொறுப்பிலிருந்த அனகை முருகேசனும் கட்சியிலிருந்து விலகுவதாக கடிதம் அனுப்பியுள்ளாா். இவா், ஏற்கெனவே தேமுதிகவில் பொருளாளா், தலைமை நிலையச் செயலா் என பதவிகளை வகித்து வந்தவா். முன்னாள் எம்எல்ஏ-வான இவா், தேமுதிகவிலிருந்து சில எம்எல்ஏ-க்கள் திமுகவில் இணைந்தபோது விஜயகாந்துடன் பக்கபலமாக இருந்தவா் என்பது குறிப்பிடத்தக்கது.