தொகுதி மறுசீரமைப்பு: பொய்யான பதற்றத்தை ஏற்படுத்துகிறார் முதல்வர் - எல். முருகன்
தொகுதி மறுசீரமைப்பு குறித்து பொய்யான பதற்றத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் ஏற்படுத்துகிறார் என மத்திய இணையமைச்சர் எல். முருகன் தெரிவித்தார்.
ஈரோடு, மதுரையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக மத்திய இணையமைச்சர் எல். முருகன் கோவை விமான நிலையம் வந்தடைந்தார். அவருக்கு பாஜகவினர் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுடன் பேசிய அவர்,
"தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது ஆட்சியின் தோல்விகளை மறைப்பதற்காக நாடாளுமன்ற வார்டு மறுசீரமைப்பு பிரச்னையை எழுப்பியுள்ளார்.
தமிழகத்தில் மின்சாரக் கட்டண உயர்வு, டாஸ்மாக் ஊழல் என பல ஊழல்கள் திமுக அரசில் உள்ளன. முதல்வர்தான் அரசை நடத்துகிறாரா? தம்பிகள்தான் இந்த ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறார்கள் எனும் நிலை உள்ளது.இந்த தோல்விகளை மறைப்பதற்காக மத்திய அரசை குறை சொல்வதை வாடிக்கையாக வைத்துள்ளார் முதல்வர்.
ஏற்கனவே பிகார், தெலங்கானாவில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் நடத்துவதற்கு ஸ்டாலினுக்கு மனமில்லை. ஆனால் பிரதமர் நரேந்திர மோடி சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படுகின்ற அறிவிப்பை வெளியிட்டு இந்தியா முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தவிருக்கிறார். பிரதமர் மோடி சமூக நீதியின் உண்மையான தலைவராக இருந்து கொண்டிருக்கிறார். இங்கு போலி சமூகநீதி பேசிக்கொண்டு ஸ்டாலின் மறுசீரமைப்பு விவகாரத்தில் இல்லாத விஷயத்தில் திசை திருப்பி வருகிறார்.
நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இதுகுறித்து எங்கும் பேசியதில்லை. நாடாளுமன்றத்தில் இதுகுறித்து யாரும் விவாதத்ததில்லை. பிரதமர் தெளிவாக கூறிவிட்டார், யாருக்கும் எந்த மாநிலத்திற்கும் பாதகம் இல்லாமல் தொகுதிகள் மறுசீரமைக்கப்படும் எனக் கூறியுள்ளார்.
உள்துறை அமைச்சர் கோவை வந்தபோதும் மறுசீரமைப்பு யாருக்கும் எந்தவித பாதிப்பும் இல்லாமல் அனைவருக்கும் சமமான நீதி வழங்கும் மறுசீரமைப்பாக இருக்க வேண்டும் என கூறியிருந்தார்.
நாளை உள்துறை அமைச்சர் மதுரை வர உள்ளார். அவர் ஏற்கனவே பலமுறை கூறியுள்ளார். ஆனால் இல்லாத ஒரு விஷயத்தை இருப்பதுபோல மக்களிடத்தில் பொய்யான திசை திருப்புதல் செயலை தமிழக முதல்வர் செய்து கொண்டிருக்கிறார்.
தமிழக முதலமைச்சராக இதுபோன்ற விஷயங்களில் திசை திருப்புவதை விட்டுவிட்டு அரசாங்கத்தை முறையாக நடத்த வேண்டும்" எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளிக்கையில்,
காவல்துறை அதிகாரிகளுக்கான விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். அது அவர்களது கடமை. அதேபோல அவரவரின் கருத்துக்களைச் சொல்வது என்பது அடிப்படை உரிமையாகும். திமுக அரசு முருக பக்தர்களுக்கு எதிரான அரசாக உள்ளதாகவும் அதனை கண்டிக்கும் விதமாக முருக பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் தன்னெழுச்சியாக இந்த மாநாட்டை முன்னெடுத்துச் செல்வதாகவும் தெரிவித்தார்.
மேலும் தமிழ் கலாசாரத்தை மதிக்கும் விதமாக ஆண்டுதோறும் காசி தமிழ்ச் சங்கமும் சௌராஷ்ட்ரா தமிழ்ச் சங்கமும் மத்திய அரசு சார்பில் நடத்தப்பட்டு வருவதாகவும் தமிழ் கடவுள் முருகன் மாநாட்டினை இங்கு நடத்துவதுதான் சரியானது எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
பொறியியல் படிப்புக்கு 3 லட்சத்துக்கும் அதிகமானோர் விண்ணப்பம்!