போராட்டத்துக்கு அனுமதி மறுப்பு; 144 தடை; உயர்நீதிமன்றத்தில் முறையீடு! -டென்ஷனில்...
``நவீன வசதிகளுடன் ரூ.10 கோடி செலவில் சாரண இயக்க அலுவலகம்'' -முதல்வர் அறிவிப்பு
திருச்சியில் பிரமாண்ட விழா..
திருச்சி மாவட்டம் மணப்பாறையில் உள்ள சிப்காட் வளாகத்தில் பாரத சாரண, சாரணியர் வைர விழா மற்றும் முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டு பெருந்திரளணி விழா கடந்த மாதம் 28 -ம் தேதி தொடங்கி பிப்ரவரி 3- ம் தேதி வரை நடைபெற்றது.
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், விழாவை முதல்நாள் தொடங்கி வைத்ததோடு, இந்த நிகழ்வு குறித்த சிறப்பிதழ் மற்றும் அஞ்சல் உறையை வெளியிட்டார். இதில், கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் கலந்துகொண்டு, சிறப்பு கையேட்டினை வெளியிட்டார். அதன்பிறகு, ஒரே இடத்தில் 20,000 சாரணர்கள் ஒன்றுகூடி உலக சாதனை படைத்தனர். இந்த நிகழ்வில் 12,000 சாரணர்கள் உலகளவில் இருந்து கலந்துகொண்டார்கள். தமிழ்நாட்டில் மட்டும் இருந்து கிட்டத்தட்ட 5000 பேர் கலந்துகொண்டார்கள்.
இலங்கை, நேபாளம், சவுதி அரேபியா, மலேசியா ஆகிய பன்னாடுகளில் இருந்து சுமார் 1000 பேர் இந்த முகாமில் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள். இதைத்தவிர, இந்தியா முழுக்கவுள்ள பிற மா நிலங்களைச் சேர்ந்தவர்கள் கலந்துகொண்டனர். நிறைவு நாளான நேற்று மாலை நடைபெற்ற நிகழ்வில் முதல்வர் கலந்துகொண்டார். அதற்காக, அவர் சென்னையிலிருந்து நேற்று திருச்சி வந்தடைந்தார். திருச்சி விமான நிலையத்தில் அவருக்கு, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, சட்டமன்ற உறுப்பினர்கள் சௌந்தரபாண்டியன், பழனியாண்டி கதிரவன், நாடாளுமன்ற திருச்சி தொகுதி உறுப்பினர் துரை வைகோ, அரசு அதிகாரிகள் மற்றும் தி.மு.க-வினர் வரவேற்பு அளித்தனர்.
அதனை ஏற்றுக்கொண்ட முதல்வர், விமான நிலையத்தில் வரவேற்பு கொடுத்த தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கொடுத்த மனுக்களை பெற்றுக் கொண்டார். அதில், திருச்சி மாவட்டம், துறையூர் புத்தனாம்பட்டியில் ஜெராக்ஸ் கடை வைத்திருக்கும், அபினிமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளியான செல்வம் என்பவர், அரசு கொடுக்கக் கூடிய உதவித்தொகையிலும், ஜெராக்ஸ் கடையில் கிடைக்கும் வருவாயிலும் வாழ்ந்து வருகிறேன் எனவும் தனது தொழில் அபிவிருத்திக்காக இன்வெர்ட்டர் பேட்டரி ஒன்றையும், புகைப்பட அச்சுப்பொறி கருவி ஒன்றையும் தனக்கு வழங்கி உதவிடுமாறு கோரிக்கை மனு அளித்தார். அதனைப் பெற்றுக் கொண்ட முதல்வர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்துச் சென்றார்.
திருச்சியில் முதல்வர் ஆய்வு
அதேபோல், கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ரூ.1,85,34,000 மதிப்பில் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் கட்டப்பட்ட பெரும்பிடுகு முத்தரையர், சர்.ஏ.டி.பன்னீர்செல்வம், பாகவதர், மணிமண்டபங்களில் மற்றும் அங்கு உள்ள நூலகத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அதன்பிறகு, மணப்பாறையில் நடைபெறும் சாரண, சாரணியர் இயக்கத்தின் வைரவிழா நிகழ்வில் கலந்துகொண்டார்.
நிகழ்வு நடைபெறும் இடத்திற்கு வந்த முதலமைச்சரை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, சாரண, சாரணியர், அதிகாரிகள் உள்ளிட்டோர் வரவேற்றனர். தொடர்ந்து, மேடைக்கு வந்த முதலமைச்சர் சாரண, சாரணியருடன் செல்ஃபி எடுத்துக்கொண்டார். அதனைத் தொடர்ந்து, வைர விழா மலரை வெளியிட்டார்.
`சாரண இயக்கத்தின் பாசறை'
இறுதியாக, இந்த நிகழ்வில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,
“இது மணப்பாறையா இல்லை சாரண, சாரணியர் இயக்கத்தின் பாசறையா என வியக்கும் வகையில் ஏற்பாடு செய்த்துள்ள அன்பில் மகேஸ் அவர்களுக்கு பாராட்டுகள். மகேஸை நான் குழந்தையிலிருந்து பார்த்து வருகிறேன். இன்று பள்ளி கல்வித்துறை அமைச்சராக அவர் செய்து வரும் சாதனைகளை கூற இந்த ஒரு நிகழ்ச்சி போதாது. பள்ளி கல்வித்துறையில் செயல்படுத்தப்பட்ட இல்லம் தேடி கல்வி பொருளாதார ஆய்வறிக்கையிலும் பாராட்டுகளை பெற்றுள்ளது. அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பள்ளி கல்வித்துறையில் பல்வேறு சாதனைகளை செய்து வருகிறார்.
`மக்கள் மீதான பற்று தான் நாட்டுப்பற்று..'
அவரின் சாதனைகளை பார்க்க அவரின் தந்தை பொய்யாமொழி இல்லை என்கிற வருத்தம் இருந்தாலும், பொய்யாமொழி இடத்திலிருந்து நான் அதை பார்த்து வருகிறேன். சாரண, சாரணியர் இயக்கத்தில் இந்தியா முழுவதும் 80 லட்சம் மாணவர்கள் உள்ளார்கள். தமிழகத்தில் 12 லட்சம் பேர் உள்ளார்கள். எதுவாக இருந்தாலும் தமிழகத்தின் பங்கு இருக்கும் என்பதை சாரண, சாரணியர் இயக்கத்திலும் வெளி தெரிகிறது. நம் நாட்டுப்பற்று என்பது நாட்டின் மீதான பற்று என்பதை கடந்து மக்கள் மீதான பற்றாக இருக்க வேண்டும். மக்கள் மீதான பற்று தான் உண்மையான நாட்டுப்பற்று.
வைர விழா..
சாரண, சாரணியர் பொன் விழா கொண்டாடும் போது கலைஞர் முதல்வராக இருந்தார். இன்று வைர விழா கொண்டாடும் போது நான் முதலமைச்சராக இருக்கிறேன். நாம் நம் நாட்டில் சகோதத்துரத்துவ உணர்வோடும், ஒற்றுமை உணர்வோடும் வாழ்ந்து வருகிறோம். பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் இங்கு ஒன்று திரண்டு, ஒருங்கிணைந்து ஒரே குடும்பமாக இருப்பது தான் நம் அன்பின் வலிமை. திராவிட மாடல் அரசால் இந்த விழாவிற்கு 33 துணை குழுக்கள் அமைக்கப்பட்டு இந்த விழாவிற்கான ஏற்பாடுகள் சிறப்பாக நடந்தது.
ரூ.10 கோடி செலவில் சாரண இயக்க அலுவலகம்
நிகழ்வை சிறப்பாக நடத்திய அனைவருக்கும் நன்றி. நிதி ஆயோக் அறிக்கையில் 17 இலக்குகளிலும் தமிழகம் தான் முன்னிலையில் உள்ளது. தமிழ்நாடு சாரண இயக்க அலுவலகம் நவீன வசதிகளுடன் ரூ.10 கோடி செலவில் அமைக்கப்படும் என்பதை மகிழ்ச்யுடன் தெரிவித்து கொள்கிறேன். நாம் ஒற்றுமை உணர்வை எப்பொழுதும் விட்டு விடக் கூடாது. மானிடப்பிறப்பில் மனிதர்கள் அனைவரும் ஒன்று என்கிற உணர்வோடு இங்கிருந்து பிரிந்து சென்றாலும் உள்ளத்தால் ஒன்று என்கிற நிலை எப்பொழுதும் இருக்க வேண்டும் என்றார்.