நாக்பூர் வன்முறை: இதுவரை 105 பேர் கைது, 3 புதிய வழக்குகள் பதிவு!
நாக்பூர் வன்முறை சம்பவத்தில் இதுவரை 105 பேர் கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மகாராஷ்டிரத்தின் சத்ரபதி சம்பாஜி நகர் மாவட்டத்தில் உள்ள ஔரங்கசீப்பின் கல்லறையை இடிக்க வேண்டும் என ஹிந்து அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டன.
ஒளரங்கசீப்பின் கல்லறையை இடிக்க வலியுறுத்தி மாநில முதல்வா் தேவேந்திர ஃபட்னவிஸின் சொந்த ஊரான மத்திய நாகபுரியின் சிட்னிஸ் பூங்கா பகுதியில், விஷ்வ ஹிந்து பரிஷத் மற்றும் பஜ்ரங் தளம் ஆகிய அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் திங்கள்கிழமை (மார்ச் 17) இரவு 7.30 மணியளவில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையும் படிக்க | 2019-க்குப் பின் இந்தியாவில் இனக் கலவரம் 94% அதிகரிப்பு! -பாஜக அரசு மீது ஆம் ஆத்மி குற்றச்சாட்டு
இந்தப் போராட்டத்தில் சிறுபான்மை சமூகத்தின் புனித நூல் எரிக்கப்பட்டதாக வதந்தி பரவியது. இதற்கு இஸ்லாமிய அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இரு அமைப்புகளுக்கு இடையிலான மோதல் ஒருகட்டத்தில் வன்முறையாக மாறியது.
இதில் அங்கிருந்த வாகனங்கள் தீயிட்டு எரிக்கப்பட்டன. இதனைத் தடுக்க வந்த காவல் துறையினர் மீதும் கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டதால், அவர்களை தடியடி நடத்தி காவல் துறையினர் கலைத்தனர். இதில், காவலர்கள் உள்பட பலர் படுகாயம் அடைந்தனர்.
இதுதொடர்பாக நகரின் பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, பலர் கைது செய்யப்பட்டனர்.
இந்த கலவரத்தைத் தூண்டுவதற்கு பின்னணியில் செயல்பட்டதாக சிறுபான்மை கட்சியைச் சேர்ந்த பஹீம் கான் என்பவரை நாக்பூர் காவல் துறையினர் கைது செய்தனர். ஹிந்து அமைப்புகளைச் சேர்ந்த சிலரும் சரணடைந்ததாகக் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, நாக்பூர் வன்முறைச் சம்பவத்தில் இன்று மட்டும் 14 பேர் கைதாகியுள்ளனர்.
இத்துடன், மொத்தமாக 105 பேர் வரை இந்த வன்முறை சம்பவத்தில் கைதானது குறிப்பிடத்தக்கது.
கைது செய்யப்பட்ட நபர்களில் 10 பேர் சிறார்கள். மேலும், வன்முறை தொடர்பாக மேலும் 3 புதிய வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.