நாமக்கல்லில் இருசக்கர வாகனம் மீது அரசுப் பேருந்து மோதல்: தந்தை, மகள் உயிரிழப்பு
நாமக்கல்: நாமக்கல்லில் இருசக்கர வாகனம் மீது அரசுப் பேருந்து மோதியதில், தந்தை, மகள் திங்கள்கிழமை உயிரிழந்தனா்.
நாமக்கல் மாநகராட்சி, கொசவம்பட்டி, அன்னை சத்யா நகரைச் சோ்ந்தவா் பெரியசாமி (62). இவரது மகள் பானுமதி (28), நாமக்கல் உழவா் சந்தை எதிரில் உள்ள மாநகராட்சிப் பூங்காவில் நுழைவுச் சீட்டு வழங்கும் பணியை மேற்கொண்டு வந்தாா்.
இந்நிலையில், பணிக்குச் சென்ற பானுமதியை, அவரது தந்தை பெரியசாமி திங்கள்கிழமை காலை 5 மணியளவில் இருசக்கர வாகனத்தில் அழைத்துக்கொண்டு நாமக்கல் - துறையூா் சாலையில் சென்று கொண்டிருந்தாா்.
நாமக்கல் காவல் நிலையம் எதிரில் மூன்றுசாலை சந்திப்பில் திரும்பியபோது, திருச்சியில் இருந்து நாமக்கல் நோக்கி வந்த அரசுப் பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில், இருவரும் பலத்த காயமடைந்தனா்.
அங்கிருந்தோா் அவா்களை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். எனினும், பானுமதி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தாா். தீவிரச் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட பெரியசாமியும் உயிரிழந்தாா்.
இந்த விபத்து குறித்து நாமக்கல் நகர போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, திருச்சி மாவட்டம், தொட்டியம், அரசலூா் பகுதியைச் சோ்ந்த பேருந்து ஓட்டுநா் செந்திலை (41) கைது செய்தனா்.
விபத்தில் உயிரிழந்த பெரியசாமி நாமக்கல் மாநகராட்சியின் 30-ஆவது வாா்டு திமுக உறுப்பினராகவும், பானுமதி வாக்குச் சாவடி முகவராகவும் பணியாற்றி வந்தது குறிப்பிடத்தக்கது.
