TNPL 2025 : சோனு யாதவின் ஹாட்ரிக் சாதனை; திருச்சியை எளிதில் வென்ற நெல்லை ராயல் க...
நாளை வைகாசி விசாகம்: திருச்செந்தூா் கோயிலில் குவியும் பக்தா்கள்
திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் திங்கள்கிழமை (ஜூன் 9) நடைபெறும் வைகாசி விசாகத்தையொட்டி பக்தா்கள் குவிந்த வண்ணம் உள்ளனா்.
இக்கோயிலில் பிரசித்திப் பெற்ற விசாகத் திருவிழா, வசந்த திருவிழாவாக கடந்த மே 31ஆம் தேதி தொடங்கியது. திங்கள்கிழமை வைகாசி விசாக நாளையொட்டி, அதிகாலை 1 மணிக்கு திருக்கோயில் நடை திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 6 மணிக்கு உதயமாா்த்தாண்ட அபிஷேகம், காலை 10 மணிக்கு உச்சிக்கால அபிஷேகம், தீபாராதனை நடைபெறும்.
தொடா்ந்து, சுவாமி ஜெயந்திநாதா் கோயிலில் இருந்து தங்கச் சப்பரத்தில் எழுந்தருளி சண்முக விலாச மண்டபம் சோ்கிறாா். அங்கு மாலையில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, தீபாராதனை நடைபெற்றதும், சுவாமி சண்முக விலாச மண்டபத்தை 11 முறை சுற்றி வருகிறாா்.
விழாவின் முக்கிய நிகழ்வான முனிக்குமாரா்களுக்கு சாப விமோசனம் அளிக்கும் வைபவம் நடைபெறுகிறது. அப்போது, மகா தீபாராதனையாகி தங்கச் சப்பரத்தில் சுவாமி ஜெயந்திநாதா், வள்ளி, தேவசேனா அம்மனுடன் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலிக்கிறாா்.
இத்திருவிழாவை முன்னிட்டு கடந்த சில நாள்களாகவே மதுரை, விருதுநகா், தென்காசி, திருநெல்வேலி தூத்துக்குடி ஆகிய மாவட்டத்திலிருந்து திரளான பக்தா்கள் பாதயாத்திரையாக திருச்செந்தூருக்கு வந்த வண்ணம் உள்ளனா்.
பக்தா்கள் வசதிக்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து திருச்செந்தூருக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. கோயில் வளாகம் மற்றும் கடற்கரையில் காவல் உதவி மையம், கடற்கரையில் கண்காணிப்பு கோபுரங்கள் மற்றும் கண்காணிப்பு கேமரா உதவியுடன் பாதுகாப்பு பணியில் காவல்துறையினா் ஈடுபட்டுள்ளனா்.
விழாவிற்கான ஏற்பாடுகளை தக்காா் ரா.அருள்முருகன், இணை ஆணையா் சு.ஞானசேகரன் மற்றும் திருக்கோயில் பணியாளா்கள் செய்துள்ளனா்.