'நிதியும் இல்லை; அதிகாரமும் இல்லை' - பேரவையில் புலம்பிய அமைச்சர் பிடிஆர்!
தன்னுடைய துறையில் நிதியும் இல்லை, அதிகாரமும் இல்லை என பேரவையில் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசியது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்றைய சட்டப்பேரவை கூட்டத்தொடரில் கேள்வி நேரத்தின்போது, கூடலூர் தொகுதியில் டைடல் பார்க் அமைத்துத் தர வேண்டும் என அதிமுக எம்எல்ஏ பொன் ஜெயசீலன் கோரிக்கை விடுத்தார்.
இதற்கு பதில் அளிக்கும்வகையில், தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேரவையில் ஆதங்கத்துடன் பேசியுள்ளார்.
"எனது துறையில் உள்ள சிக்கல்களை பேரவையில் ஏற்கெனவே கூறியிருக்கிறேன். எனது துறைக்கு குறைவான நிதி மட்டுமே ஒதுக்கப்படுகிறது. மற்ற மாநிலங்களைப்போல் அல்லாமல் தொழிற் பூங்காக்களில் சிறு பகுதி மட்டுமே என் துறையில் செயல்படுகிறது.
டைடல் பார்க், நியோ டைடல் பார்க் போன்றவை தொழில் துறை வசமே உள்ள அசாதாரண நிலை 20 ஆண்டுகளாகத் தொடர்கிறது. எனவே, யாரிடம் நிதி, திறன் மற்றும் அதிகாரம் இருக்கிறதோ அவரிடம் கேட்டால் செய்துகொடுப்பார் என்று கருதுகிறேன், எங்களிடம் அது இல்லை" என்று பேசியுள்ளார்.
உடனே பேரவைத் தலைவர் அப்பாவு குறுக்கிட்டு, 'துறைசார்ந்த பிரச்னைகளை முதல்வரிடம் பேசி தீர்வு காணுங்கள். உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர் நேர்மறையான பதில் சொன்னால் நன்றாக இருக்கும்' என்று அறிவுறுத்தினார்.
இதையும் படிக்க | மகாராஷ்டிரத்திலும் ஹிந்திக்கு எதிர்ப்பு! என்ன நடக்கிறது?