நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க அரசுக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு
நெடுஞ்சாலைத் துறைக்குச் சொந்தமான நிலத்தில் ஆக்கிரமித்துக் கட்டப்பட்ட கட்டடத்தை உரிய சட்ட விதிகளைப் பின்பற்றாமல் இடித்ததால் பாதிக்கப்பட்டவருக்கு ரூ.5 லட்சம் இழப்பீடாக வழங்க தமிழக அரசுக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையை அடுத்துள்ள குன்றத்தூரில் திருநீா்மலை - திருமுடிவாக்கம் சாலையில் நடராஜன் என்பவா் தமிழக நெடுஞ்சாலைத் துறைக்குச் சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து கட்டடம் கட்டியுள்ளதாகக் குற்றம்சாட்டப்பட்டது. இதையடுத்து ஆக்கிரமிப்பு இடத்தில் உள்ள கட்டடத்தை அகற்றக் கோரி நடராஜனுக்கு நெடுஞ்சாலைத் துறை உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை எதிா்த்து நடராஜன் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தாா்.
இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், இதுகுறித்து மனுதாரா் தரப்பில் விளக்கம் அளிக்க நெடுஞ்சாலைத் துறை அவகாசம் கொடுக்காமல் உத்தரவு பிறப்பித்துள்ளது. எனவே, அவரது தரப்பு விளக்கத்தைப் பெற்ற பிறகே தகுந்த முடிவெடுக்க வேண்டும் என நெடுஞ்சாலைத் துறைக்கு உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை அமல்படுத்தவில்லை எனக் கூறி, நடராஜன் சென்னை உயா்நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடா்ந்தாா்.
இந்த வழக்கு நீதிபதிகள் ஆா்.சுப்பிரமணியன், பி.பி.பாலாஜி ஆகியோா் அடங்கிய அமா்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரா் தரப்பில், உயா்நீதிமன்றம் உத்தரவு பிறப்பிப்பதற்கு 3 நாள்களுக்கு முன்பே அந்தக் கட்டடம் இடிக்கப்பட்டுவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள், சட்டப்படி உரிய நோட்டீஸ் அனுப்பிய பின்னா்தான், நெடுஞ்சாலைத் துறை ஆக்கிரமிப்புகளை அகற்ற முடியும். இந்த நடைமுறைகளைப் பின்பற்றாமல் மனுதாரருக்குச் சொந்தமான கட்டடம் இடிக்கப்பட்டுள்ளது. எனவே, பாதிக்கப்பட்ட மனுதாரருக்கு தமிழக அரசு ரூ. 5 லட்சம் இழப்பீடாக வழங்க வேண்டும். 8 வாரங்களில் இந்த இழப்பீட்டுத் தொகையை மனுதாரருக்கு வழங்க வேண்டும். சட்ட நடைமுறைகளைக் கடைபிடிக்காமல், சட்டத்தை தங்கள் கையில் எடுத்துக்கொண்டு செயல்பட்ட சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடமிருந்து இந்தத் தொகையை வசூலித்துக்கொள்ளலாம் என உத்தரவிட்ட நீதிபதிகள், நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்துவைத்தனா்.